(எம்.மனோசித்ரா)
கொழும்பு - காலி முகத்திடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்து 5 பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எந்தவொரு அமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பதாதைகள் எவற்றையும் காட்சிப்படுத்தியிருக்கவில்லை.
எனினும் அவர்கள் கடந்த மே மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் 9 ஆம் திகதியன்றும் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டனர்.
இதன்போது கடந்த ஆர்ப்பாட்டக் காலங்களில் வெவ்வேறு காரணிகளால் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கும், மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களை நினைவுபடுத்துவதற்காகவுமே தாம் இங்கு கூடியிருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
எவ்வாறிருப்பினும் அவர்களை அங்கிருந்து கலைப்பதற்கு பொலிஸார் முயற்சித்தபோதே, அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணொருவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்த போது, அதற்கு அங்கிருந்தவர்கள் இடமளிக்காமல் பொலிஸாருடன் முரண்பட்டனர்.
எனினும் இன்று மாலையானதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment