(இராஜதுரை ஹஷான்)
நாட்டு மக்கள் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளபோது அரசியல்வாதிகள் அரசியலமைப்பின் ஊடாக அரசியல் ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்களாயின் அவர்களும் பிரயோசனமற்றவர்களாகி, அரசியலமைப்பும் பிரயோசனமற்றதாகிவிடும். எனவே இதே நிலைமை தொடருமாயின் நாட்டில் ஒவ்வொரு சந்தியிலும் அரசியமைப்பை தீயிட்டு கொளுத்துவோம் என பாகொட ஜன்தவங்ஷ தேரர் தெரிவித்தார்.
இடைக்கால அரசாங்கம் தொடர்பில் அரசியல் கட்சி தலைவர்களுக்கும், மகா சங்கத்தினருக்குமிடையில் ஞாயிற்றுக்கிழமை (1) மாலை கொழும்பில் உள்ள இலங்கை மன்ற கல்லூரியில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய கீதம் இசைக்கப்படும் போது மரியாதை செலுத்தி எழுந்து நிற்கிறோம். மயக்கமடைந்து விழுந்த பிறகு மரியாதை செலுத்த முடியாத நிலைமை ஏற்படும். நாடு பல்துறைகளில் வீழ்ச்சியடைந்துள்ளது.
மருந்து மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் இல்லாமல் பொதுமக்கள் உயிரிழக்கும் நிலைமை ஏற்படும்போது அரசியலமைப்பின் அடிப்படையில் அரசியல் ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்திக் கொண்டு மக்கள் இறந்தாலும் பரவாயில்லை என மக்கள் பிரதிநிதிகள் கருதுவார்களாயின், மக்கள் பிரதிதிகளும் அவசியமில்லை, அரசியலமைப்பும் அவசியமில்லை.
அரசியல்வாதிகள் அரசியமைப்பில் இருந்துகொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சிப்பார்களாயின் அரசியலமைப்பை நாட்டில் ஒவ்வொரு சந்தியிலும் தீயிட்டு கொளுத்துவோம். மக்களின் நலனுக்காகவே அனைத்தும் உள்ளன.
இடைக்கால அரசாங்கம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கு பிரதமர் உட்பட முழு அரசாங்கமும் மதிப்பளிக்க வேண்டும். அத்துடன் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிளும் இடைக்கால அரசாங்கம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.
பொதுத் தேர்தல் ஊடாகவே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என ஒரு சில அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள யோசனை ஏற்றுக் கொள்ள கூடியது. பொதுத் தேர்தலை நடத்தும் சூழல் நாட்டில் தற்போது கிடையாது. இடைக்கால அரசாங்கத்தின் ஊடாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment