(எம்.மனோசித்ரா)
இலஞ்ச, ஊழல் சட்டத்துக்கமைய பணம் மாத்திரமின்றி வேறு எந்த வகையிலும் வழங்கப்படும் சலுகைகள், சிறப்புரிமைகள், பதவிகளும் தண்டனைக்குரிய குற்றமாகும். உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு அரச பதவிகளை அரசாங்கம் பரிந்துரைக்குமாயின் அதுவும் சட்டத்திற்கமைய குற்றமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் சனிக்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கத்துக்கு காணப்பட்ட மக்கள் ஆணை இல்லாமல் போயுள்ளமை உறுதியாகியுள்ளது. அரசாங்கம் 23 இலட்சம் வாக்குகளை இழந்திருக்கிறது.
பொதுத் தேர்தலில் 60 சதவீதமாகக் காணப்பட்ட மக்கள் ஆணை, உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 43 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.
அரசாங்கத்துக்கு 50 சதவீத வாக்குகள் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களில், பெரும்பான்மையைப் பெற்றுள்ள தரப்பினருக்கு ஆட்சியமைப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
2ஆம் திகதி உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக் காலம் ஆரம்பமாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், பதவி நியமனங்கள் உள்ளிட்டவை தொடர்பில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிச்சயமற்ற நிலைமைக்குள் ஊழலுக்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. பெரும்பான்மை அற்ற உள்ளூராட்சி மன்றங்களில் 50 சதவீதத்தை பெற்றுக் கொள்வதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுடன் அரசாங்கம் பேரம் பேசிக் கொண்டிருக்கிறது. அது மாத்திரமின்றி பல்வேறு சிறப்புரிமைகளும் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்படுகின்றன.
தற்போதுள்ள இலஞ்ச, ஊழல் சட்டத்துக்கமைய பணம் மாத்திரமின்றி வேறு எந்த வகையிலும் வழங்கப்படும் சலுகைகள், சிறப்புரிமைகள், பதவிகளும் தண்டனைக்குரிய குற்றமாகும். அவற்றை வழங்குபவர்களைப் போன்றே பெறுபவர்களும் சட்டத்தின் முன் குற்றவாளிகளாவர்.
மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோவுக்கு தண்டனை வழங்கப்பட்டமை மகிழ்ச்சிக்குரியது. ஆனால் அந்த சட்டம் அரசாங்கத்துக்கும் பொதுவானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
எனவே உள்ளூராட்சி மன்றங்களில் இரண்டாவது பட்டியலிலுள்ள உறுப்பினர்களை நியமிப்பதற்கான வர்த்தமானியையும் துரிதமாக வெளியிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment