புதிய அரசு உரிய நீதியை வழங்க முன்வர வேண்டும் - வலியுறுத்தியுள்ள ரவிகரன் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Saturday, May 31, 2025

புதிய அரசு உரிய நீதியை வழங்க முன்வர வேண்டும் - வலியுறுத்தியுள்ள ரவிகரன் எம்.பி

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் முன்னைய இனவாத அரசுகள் செயற்பட்டதைப்போல தற்போதைய அரசும் செயற்படாது, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு உரிய நீதியை வழங்க புதிய அரசு முன்வர வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் இன்று (31) முல்லைத்தீவு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத்தினர், தமது தொடர் போராட்டத்தின் 3007 ஆவது நாளில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர். இவ்வார்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கலந்துகொண்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் விவகாரத்தில் அரசாங்கம் கவனயீனமாகச் செயற்படுகின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு இராணுவத்திடம் கையளித்த உறவுகளை, மீளக் கையளிக்குமாறு அவர்களின் உறவுகள் தொடர்சியாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக எமது உறவுகள் வட்டுவாகல் பகுதியிலும் கைது செய்யப்பட்டார்கள், முகாம்களிலும் கைது செய்யப்பட்டார்கள், கடலிலும் கைது செய்யப்பட்டனர், வெள்ளை வானில் கடத்தப்பட்டனர் இவ்வாறாக பல வளிகளிலும் எமது உறவுகளுக்கு கடந்தகால இனவாத அரசுகள் துன்பங்களை விளைவித்தன.

இவ்வாறு கையளிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீளக் கையளிக்குமாறு கோரும் அவர்களது உறவுகளை அரசாங்கங்கள் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றன. இந்த நிலை மாற வேண்டும்.

கடந்த கால இனவாத அரசாங்கங்கள்தான் இவ்வாறு ஏமாற்றினார்களெனப் பார்த்தால் தற்போது ஆட்சிப் பொறுப்பிலுள்ள அரசாங்கம் கூட இது தொடர்பில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.

குறிப்பாக ஏற்கனவே தேர்தல் காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு தீர்வு வழங்கப்படுமென இந்த அரசாங்கத்தைச் சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.

அதன் பின்னர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் எட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகமகவை சந்தித்தபோது கூட காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை முன்வைத்தோம். 

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

இத்தகைய சூழலில் இங்கு இனப் படுகொலையே இடம்பெறவில்லையெனவும், அவ்வாறு இனப் படுகொலை இடம்பெற்றமைக்கு ஆதாரங்கள் எவையுமில்லையெனவும் அமைச்சர்களே சொல்லுமளவிற்கு நிலைமைகளைக் காணக்கூடியவாறிருகின்றது.

குண்டுகள் போட்டு அழித்து, அந்த அழிவுகளிலிருந்து மீண்ட எமது மக்கள், தமிழ் இனப் படுகொலை இந்த மண்ணில் இடம்பெற்றது என்பதற்குச் சாட்டசியாக இருக்கின்றனர்.

தற்போது கனடாவும் எமது மண்ணில் தமிழ் இனப் படுகொலை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளது.

கடந்த காலங்களில் தமிழ் இனப் படுகொலைக்கான தீர்மானம் கனேடியப் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. அண்மையில் கனடாவின் பிரம்டன் நகரின் தமிழ் இனப் படுகொலை நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

கடந்த மே 18 தமிழின அழிப்பு நாளில் தற்போதைய கனேடியப் பிரதமரும் இரங்கல் செய்தியொன்றையும் வெளியிட்டிருந்தார். 

அதேபோல் மேலுமொரு நகரில் தமிழ் இனப் படுகொலை நினைவுத் தூபி அமைப்பதற்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக அறிகின்றோம். 

இவ்வாறாக வெளிநாடுகளே இங்கு தமிழ் இன அழிப்பு இடம்பெற்றுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கின்ற நிலையில் தற்போதைய அரசாங்கமும், கடந்தகால இனவாத அரசுகளைப்போலவே தமிழ் இனப் படுகொலைச் செயற்பாட்டை மூடிமறைக்கும் வகையில் செயற்படுகின்றது.

எது எவ்வாறாயினும் எமது மண்ணில் தமிழ் இனப் படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையினை, நாம் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டேயிருப்போம். எனவே இதற்றகுரிய தீர்வை இந்த அரசாங்கம் தந்தேயாக வேண்டும்.

அதேவேளை சர்வதேச நாடுகளும் இந்த விடயத்தில் தலையீடு செய்து இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு உரிய தீர்வைப் பெற்றுத் தரவேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடிக் கொண்டிருந்த வயது முதிர்ந்த தாயார்கள் மற்றும் தந்தையர்கள் தமது உறவுகள் கிடைக்காமலேயே உயிரிழந்துள்ள அவலங்களும் இங்கே அரங்கேறியுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் புதிய அரசாங்கமும் கடந்த அரசாங்கம் செயற்பட்டதைப்போன்று செயற்படாமல் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான உரிய நீதியை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment