எனது தந்தை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேற மாட்டார் என்று அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஏ.எப்.பி சர்வதேச செய்தி சேவைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கியதையடுத்து, ஒரு நாள் வன்முறையைத் தூண்டியதைத் தொடர்ந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இரவிலும் போராட்டங்கள் தீவிரமடைந்ததுடன், முன்னாள் பிரதமர் தங்கியிருந்த அலரி மாளிகையை போராட்டக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர்.
கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் இரவு அமைதியின்மை ஏற்பட்டதைத் தொடர்ந்து பலத்த இராணுவப் பாதுகாப்புக்கு மத்தியில் முன்னாள் பிரதமர் அங்கிருந்து அகற்றப்பட்டார்.
அவரும் அவரது குடும்பத்தினரும் இன்று காலை திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
76 வயதான மஹிந்த ராஜபக்ஷ, தனது ஐந்து தசாப்த கால அரசியல் வாழ்க்கையில் மிக மோசமான நெருக்கடியில் தற்போது உள்ளார்.
இந்நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவருடைய மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ராஜபக்ச குடும்பம் நாட்டை விட்டு வெளியேறுவதாக வதந்திகள் பரவியபோதிலும், அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என அவர் தெரிவித்தார்.
“நாங்கள் வெளியேறப் போகிறோம் என்று நிறைய வதந்திகள் உள்ளன. நாங்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்," என்று நாமல் கூறினார்.
அவரது குடும்பத்திற்கு எதிரான போக்கால் மோசமான இழுக்கை சந்தித்துள்ளோம் என நாமல் விவரித்தார்.
மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என்றும், தனக்குப் பின்வருபவரைத் தெரிவு செய்வதில் தீவிரப் பங்கு வகிக்க விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துவெளியிட்ட நாமல், "எனது தந்தை பாதுகாப்பாக இருக்கிறார், அவர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார், அவர் குடும்பத்துடன் தொடர்பு கொள்கிறார்" என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு தசாப்தங்களாக ராஜபக்ஷ குடும்பம் இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்திற்கு எதிராக பல வாரங்களாக நடைபெற்ற மாபெரும் அமைதியான போராட்டங்கள் திங்களன்று வன்முறையாக வடிவெடுத்தது.
ஆதரவாளர்கள் கிராமப்புறங்களில் இருந்து தலைநகரை நோக்கி வருகை தந்து அரசாங்க ஆதரவாளர்கள் அரசாங்க எதிர்ப்பாளர்களைத் தாக்கினர்.
இந்த வன்முறை தலைநகரத்திலிருந்து கிராமத்திற்கு பரவியதையடுத்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வீடுகள் தீயிட்டு அழிக்கப்பட்டன.
இது குறித்து கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, எதிர்ப்பு தெரிவிக்கும் இலங்கையர்களின் உரிமையை தானும் தனது குடும்பத்தினரும் முழுமனதுடன் ஏற்றுக் கொண்டதாகவும், இந்த நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கையை ராஜபக்ஷக்கள் ஒருபோதும் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment