மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மீது தாக்குதல் : இரகசிய இடத்தில் வைத்து சிகிச்சை : சில இளைஞர்கள் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 10, 2022

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மீது தாக்குதல் : இரகசிய இடத்தில் வைத்து சிகிச்சை : சில இளைஞர்கள் கைது

(எம்.எப்.எம்.பஸீர்)

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது இன்று (10) தாக்குதலொன்று நடாத்தப்பட்டது.  கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பெரஹர மாவத்தை - பேர வாவிக்கு அருகில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அலரி மாளிகை நோக்கி செல்லும் குறித்த பாதை ஊடாக சிவில் உடையில், பயணித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை, அங்கிருந்த பொதுமக்கள்  தடுத்து வாகனத்திலிருந்து இறக்கி இன்று பிற்பகல் இந்த தாக்குதலை நடாத்தியுள்ளனர்.

நேற்று (9) “மைனா கோ கம”, “கோட்டா கோ கம”  அமைதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை கண்மூடி வேடிக்கை பார்த்ததாகவும், அத்தாக்குதலுக்கு உதவியதாகவும் குறறம் சாட்டி பொதுமக்கள்  இந்த  தாக்குதலை நடாத்தினர்.

கைகள், தலைக் கவசம் மற்றும் தடி கொண்டு இத்தாக்குதல் நடாத்தப்பட்டதுடன், அவரின் வாகனத்திற்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

தாக்குதலில் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்துவுக்கு தலையில் காயமேற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் நடாத்தப்படும் போது, தேசபந்து தென்னகோனை காப்பாற்ற  வானை நோக்கி பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளனர்.

இந்நிலையில் காப்பார்றப்பட்ட தேபந்து தென்னகோன்,  பாதுகாப்பான இரகசிய இடமொன்றுக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது,.

 பொலிஸ் வைத்தியசாலை அல்லது  வேறு வைத்தியசாலைக்கு அவர் செல்வது அச்சம் காரணமாக தவிர்த்துள்ளதுடன், பொலிஸ் வைத்தியசாலையிலிருந்து வைத்தியர் தாதியரை அழைத்து காயத்துக்கு சிகிச்சை பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

தலையில் ஏற்பட்ட  காயத்துக்கு 5 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், தாக்குதலால் தேசபந்து தென்னகோனின் முகமும் வீக்கமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து சில இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சர்  நிஹால் தல்துவவிடம் வினவியபோது, சம்பவம் தொடர்பில் கொள்ளுபிட்டி பொலிசார் விசாரணைகளை நடாத்துவதாக கூறினார். 

No comments:

Post a Comment