இலங்கையில் மீண்டும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடா? எரிசக்தி அமைச்சரின் பதில் என்ன? - News View

About Us

About Us

Breaking

Thursday, May 5, 2022

இலங்கையில் மீண்டும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடா? எரிசக்தி அமைச்சரின் பதில் என்ன?

இலங்கையில் எரிபொருளுக்கு மீண்டும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.நேற்றிரவு முதல் நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு வரிசைகள் காணப்படுவதை பார்க்க முடிகின்றது.

நாடு முழுவதும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது.

இலங்கைக்கு தேவையான பெட்ரோல் போதுமான அளவு இருப்பு காணப்படுகின்ற போதிலும், சிலரது திட்டமிட்ட சதிகளினால் பெட்ரோல் வரிசை ஏற்பட்டுள்ளதாக, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் பெட்ரோல் தட்டுப்பாட்டை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

"டீசலுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவும்"
அத்துடன், டீசலுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவும் அவதானம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செயலிழந்துள்ளதை அடுத்து, ஏனைய மின் உற்பத்தி நிலையங்களின் ஊடாக மின்சார உற்பத்தியை மேற்கொள்வதற்கு தேவையான டீசலை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வாகனங்களுக்கு டீசலை வழங்குவதை விடவும், மின்சார உற்பத்தியை மேற்கொள்வது அவசியம் என கொள்கை அளவில் தீர்மானமொன்று எடுக்கப்பட்டு, பெருமளவிலான டீசல் மின் உற்பத்திக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் கடனுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் டீசல் ஏற்றிய கப்பல் எதிர்வரும் 11ஆம் திகதியே நாட்டை வந்தடையும் என அவர் கூறினார்.

இதனால், நாளொன்றுக்கு 4000 மெட்ரிக் டன் டீசல் தேவைப்படுகின்ற நிலையில், தற்போது சந்தைக்கு 1,000 முதல் 1,500 மெட்ரிக் டொன் டீசல் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எரிபொருள் விநியோகம் காரணமாக நாளொன்றுக்கு பெட்ரோலிய கூட்டுதாபனத்திற்கு 1613 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

தாம் நட்டத்திலேயே சந்தைக்கு எரிபொருளை விநியோகித்து வருவதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எரிபொருள் கொள்வனவுக்காக இந்தியாவினால் வழங்கப்பட்ட 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியில் தற்போது 100 மில்லியன் அமெரிக்க டொலரே எஞ்சியுள்ளது.

இந்த கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதுடன், இலங்கை இந்தியாவிடம் மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலரை கோரியுள்ளது.

மே மாதத்தில் மாத்திரம் எரிபொருள் கொள்வனவுக்கு 580 மில்லியன் டொலர் தேவைப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த மாதத்தில் மாத்திரம் 4 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும், விரைவில் எரிபொருள் தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

No comments:

Post a Comment