அவசர மருத்துவ உதவி தேவைப்படும் சூழ்நிலைகளில் 'சுவசெரிய' இலவச அம்பியூலன்ஸ் சேவையைத் தொடர்பு கொள்ளுங்கள் - பொதுமக்களிடம் வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Monday, May 30, 2022

அவசர மருத்துவ உதவி தேவைப்படும் சூழ்நிலைகளில் 'சுவசெரிய' இலவச அம்பியூலன்ஸ் சேவையைத் தொடர்பு கொள்ளுங்கள் - பொதுமக்களிடம் வேண்டுகோள்

(நா.தனுஜா)

அவசர மருத்துவ உதவி தேவைப்படும் சூழ்நிலைகளில் நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்கு அவசியமான எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், உடனடியாக 1990 என்ற இலக்கத்தின் ஊடாக 'சுவசெரிய' இலவச அம்பியூலன்ஸ் சேவையைத் தொடர்பு கொள்ளுமாறும் மாற்றுவழிகளை நாடுவதில் காலத்தை செலவிட வேண்டாம் என்றும் அச்சேவையின் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் வாகனங்களுக்கான எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு என்பவற்றின் காரணமாக அண்மைக் காலங்களில் குறிப்பிடத்தக்களவிலான உயிரிழப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை விரைவாக வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்வதற்கு எரிபொருள் இல்லாததன் காரணமாக அக்குழந்தை உயிரிழந்த சம்பவமும், தந்தையொருவர் தனது குழந்தைக்கு அவசியமான உயிர்காக்கும் மருந்தைக் கொள்வனவு செய்வதற்காக 8 மருந்தகங்களுக்குச் செல்ல வேண்டியேற்பட்டதால் அந்தக் குழந்தை மரணித்த சம்பவமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் இச்சம்பவங்கள் தொடர்பில் தமது பிரதிபலிப்பை வெளிப்படுத்தியுள்ள 'சுவசெரிய' அம்பியூலன்ஸ் சேவை அதிகாரிகள், மருத்துவ ரீதியில் ஏதேனும் அவசர சூழ்நிலைகளின்போது சம்பந்தப்பட்ட நபரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கான மாற்றுவழிமுறைகள் தொடர்பில் சிந்திக்காமல், உடனடியாக 1990 என்ற இலக்கத்தின் மூலம் 'சுவசரிய' இலவச அம்பியூலன்ஸ் சேவையைத் தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர். அதன் மூலம் நோயாளிக்கு அவசியமான முதலுதவியைத் தம்மால் வழங்க முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை இது குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இச்செயற்திட்டத்தை அறிமுகப்படுத்துவதை முன்னிறுத்திய இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளை அப்போதைய நிதியமைச்சர் மங்கள சமரவீரவுடன் இணைந்து முன்னெடுத்தவருமான ஹர்ஷ டி சில்வா பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

'சுவசெரிய' இலவச அம்பியூலன்ஸ் சேவை எவ்வித தடங்கல்களுமின்றி தொடர்ந்து இயங்கி வருகின்றது. அதேவேளை இச்சேவைக்கு அவசியமான எரிபொருள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுவதுடன், இச்சேவை நாடளாவிய ரீதியில் இயங்குகின்றது' என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment