(எம்.மனோசித்ரா)
சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரணம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இதனுடன் தொடர்புடைய அழுத்தங்கள் பாரிய சமூக சக்தியாக வெடிக்கும் என்று 'உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு' அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.
சிறுவர்களுக்கு எதிரான இவ்வாறான சம்பவங்கள் குறுகிய கால இடைவெளிக்குள் மீண்டும் மீண்டும் இடம்பெறுவதானது நமது சமூகத்தின் சட்ட விதிகளிலும் நீதி பரிபாலனத்திலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையின் மந்தமான வேகத்தை உணர்த்துவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் 'உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு' வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 28 ஆம் திகதி அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயதுடைய சிறுமியொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இடம்பெற்ற நாள் வரையான கடந்த ஒன்றரை ஆண்டு காலப்பகுதிக்குள் இலங்கையில் இடம்பெற்றுள்ள 14 ஆவது சிறுவர் கொலை இதுவாகும். முழு இலங்கையையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள இவ்வாறான சிறுவர் மரணங்கள் எம் நினைவில் உள்ளன.
ஒரு சம்பவம் இடம்பெற்று அதன் சூடு தணியும் முன்னரே இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருவதானது, நமது சமூகத்தின் சட்ட விதிகளிலும் நீதி பரிபாலனத்திலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையின் மந்தமான வேகத்தை உணர்த்துகிறது.
குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்காக தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் அமைப்பான, 'உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு' அரசாங்கம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளை கண்டறிய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
அது மாத்திரமின்றி அண்மைய நாட்களாக மருந்துகள் இன்றி வைத்தியசாலைகளில் உயிரிழக்கும் சிறுவர்கள், பொருளாதார நெருக்கடியால் பெற்றோர் அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசையில் காத்திருக்கும் போது பாதுகாப்பற்று உள்ள சிறுவர்கள், கொவிட் தொற்றினால் கல்வியை இழந்துள்ள சிறுவர்கள், தவறான கல்வி கொள்கைகளால் பாடசாலைகளில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் மற்றும் தண்டனைக்கு உட்படுத்தப்படும் சிறுவர்கள், கடன் சுமை, நுண்கடன், விவசாயப் பிரச்சனைகள், குடும்பத் தகராறு போன்ற பெரியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளால் குடும்பத்திற்கு வெளியே தற்கொலை செய்து கொண்டு அகால மரணமடையும் சிறுவர்கள், பாதுகாப்பற்ற வீதி விபத்துக்கள் மற்றும் கிண்ணியா படகு விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், சிறுவர் வேலைக்கமர்த்தல், சிறுவர் பாலியல் தொழிலாளர்கள், ஆபத்தான மற்றும் பாதுகாப்பற்ற வேலை, சிறுவர் திருமணம் மற்றும் மூடநம்பிக்கை மத நம்பிக்கைகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக அரச பொறிமுறையொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.
தற்போதைய அரசாங்கம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், பொருளாதார நெருக்கடியைப் போன்று இது தொடர்பான அழுத்தம் ஒரு சமூக சக்தியாக வெடிக்கும் என அரசாங்கத்தை எச்சரிக்கிறோம்.
இவ்விடயத்தில் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பாகிய நாமும் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்காக முன்னின்று செயற்படுவோம் என மக்களுக்கு உறுதியளிக்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment