ஏறாவூரில் நடந்த வன்முறைகள் நகர சபையில் நீதி நடவடிக்கைகளைக் கோரி கொண்டு வரப்பட்ட பிரேரணை ஏகமனதாக ஏற்பு : பாதுகாப்பு உயர் மட்டங்களுக்கு அனுப்பவும் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Monday, May 30, 2022

ஏறாவூரில் நடந்த வன்முறைகள் நகர சபையில் நீதி நடவடிக்கைகளைக் கோரி கொண்டு வரப்பட்ட பிரேரணை ஏகமனதாக ஏற்பு : பாதுகாப்பு உயர் மட்டங்களுக்கு அனுப்பவும் தீர்மானம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

நாடளாவிய வன்முறைகளின் தொடர்ச்சியாக கடந்த 10ஆம் திகதி ஏறாவூரில் நடந்த வன்முறைகள் இனி ஒருபோதும் சரித்திரத்தில் இவ்வாறு நிகழ அனுமதிக்க முடியாது என ஏறாவூர் நகர சபையில் நீதி நடவடிக்கைகளைக் கோரி கொண்டு வரப்பட்ட பிரேரணை ஏகமனதாக ஏற்கப்பட்டதாக நகர சபைச் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு அச்சபையின் மண்டபத்தில் திங்கட்கிழமை 30.05.2022 நகர சபைத் தலைவர் எம்.எஸ். நழிம் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய நகர சபைத் தலைவர் நழிம், எமது ஊரிலே கடந்த 10ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட அரசியல் விரோதத் தன்மையின் காரணமாக அருவருக்கத்தக்க செயல்களை அரங்கேற்றினார்கள். அது எமது இஸ்லாமிய மார்க்கத்திற்கும் விரோதமான செயல். தீ வைப்பு வன்முறை கொள்ளைச் சம்பவங்களை இந்த சபை வன்மையாகக் கண்டிக்கிறது.

அன்று இடம்பெற்ற சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக எனது ஆழ்ந்த கவலைகளை இந்த சபை அமர்விலே பதிவு செய்கின்றேன். இந்த அநாகரிக வன்முறைகளைச் செய்தவர்கள், தூண்டுகோலாக இருந்தவர்கள், செய்தவர்கள் நீதியன் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

இதேவேளை இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நகர சபை உறுப்பினர் எஸ்.எம்.ஏ.எஸ்.எம். சறூஜ் என்பவரால் கொண்டு வரப்பட்ட அவசர நீதி நடவடிக்கைகளை கோரிய பிரேரணை சபையினரால் கட்சி பேதமின்றி ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை ஆமோதித்தும் வழிமொழிந்தும் பல நகர சபை உறுப்பினர்கள் பேசினர்.

அந்தப் பிரேணையில்
காடையர் கும்பலொன்றின் கட்டுக்கடங்காத செயற்பாட்டின் காரணமாக கடைகள் உடைக்கப்பட்டும் தீ வைக்கப்பட்டும், கொள்ளையடிக்கப்பட்டும் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. இதில் அரச சொத்துக்களும் தனியார் சொத்துக்களும் உள்ளடக்கப்படுகின்றன. எமது நகர சபையின் அதிகாரத்துக்குட்பட்ட மையப்பகுதியில் இவ்வாறான கேவலமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமையானது முகஞ்சுளிக்க வைக்கிறது.

அமைச்சர் நஸீர் அஹமட் அவர்களின் அலுவலகமாக வாடகைக்கு அமர்த்தப்பட்ட கட்டடம் தீ வைத்துக் கொழுத்தப்பட்டது. அவ்வலுவலகத்திலிருந்த பல இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டும் தீக்கிரையாக்கப்பட்டும் அழிக்கப்பட்டன. இதனால் விதவைகள் வாழ்வாதாரமற்ற ஏழைகள் தொடர்பாக முக்கியம் வாய்ந்த ஆவணங்களும் அழிந்து போயின.

இச்செயற்பாடுகளுக்கு மூளையாய் இருந்து செயற்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வன்முறைகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நகர சபையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை வன்முறையாளர்களுக்கெதிராக அவசர சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்றும் அது பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வேண்டும் என்றும் கோரப்பட்டது.

No comments:

Post a Comment