நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை கவனத்திற் கொண்டு நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொடுப்பதற்காக சீன அரசாங்கம் 300 மில்லியன் யுவான் நிதியை கடன் உதவியாக இலங்கைக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சீன தூதுவராலயம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள சீன தூதரகம் நேற்று இந்த தகவலை அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது.
நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய மருந்துப் பொருட்கள்,உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இந்த 300 மில்லியன் யுவான் நிதியை சீன அரசாங்கத்தினால் கடன் உதவியாக பெற்றுக் கொடுக்கப்படுவதாக அந்த பதிவில் சீன தூதுவராலயம் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க சீன அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படும் அவசர தேவைகளுக்கான நிதி உதவி 500 மில்லியன் யுவானாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அது 76 மில்லியன் அமெரிக்கன் டொலராகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும்கும் சீனப் பிரதமர் லீ கெகியாங்கிற்குமிடையில் தொலைபேசி மூலமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு இணங்கவே மேற்படி நிதியுதவியை வழங்குவதற்கு சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அது தொடர்பில் நேற்றைய தினம் பிரதமர் அலுவலகம் தெரிவிக்கையில், நாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மருந்துப் பொருட்கள் மற்றும் எரிபொருள் கொள்வனவுக்கு இந்த நிதி உபயோகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment