பயனர் தரவுகளை விற்பனை செய்த ட்விட்டர் : 150 மில்லியன் டொலர் அபராதம் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 29, 2022

பயனர் தரவுகளை விற்பனை செய்த ட்விட்டர் : 150 மில்லியன் டொலர் அபராதம்

அமெரிக்காவில் சட்ட அமலாக்க அதிகாரிகள், பயனர்களின் தரவுகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, பயனர்களை இலக்கு வைத்து விளம்பரங்களை விற்க உதவுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு அபராதமாக ட்விட்டர் நிறுவனம் 150 மில்லியன் டொலர் அபராதம் செலுத்த வேண்டும்.

ட்விட்டர் நிறுவனம் அதைக் கட்டுப்படுத்தும் நிர்வாக அமைப்புகளோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக ஃபெடரல் டிரேட் கமிஷன் மற்றும் நீதித்துறை கூறியுள்ளது என்று நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன.

விளம்பரதாரர்களுக்கு பயனர்களின் கைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் போன்ற தனிப்பட்ட தகவல்களை வழங்கமாட்டோம் என்று ட்விட்டர் உறுதியளித்துள்ளது.

ஆனால், சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர், அந்த விதிகளை மீறியதாக மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஐரோப்பாவின் ஜிடிபிஆர் தரவு தனியுரிமை விதிகளை மீறியதற்காக, ட்விட்டருக்கு, 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் 400,000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டது.

நம்பகத்தன்மைக்கு விரோதமாகச் செயல்படுவதைத் தடுக்கும் சட்டத்தை அமல்படுத்துவது மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தோடு செயல்படுகின்ற, எஃப்டிசி என்ற அமெரிக்க அரசின் சுயாதீன நிறுவனம், ட்விட்டர் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைத் தவறாக வழிகாட்டும் வகையில் குறிப்பிடுவதைத் தடை செய்யக்கூடிய, 2011ஆம் ஆண்டின் தனது உத்தரவை மீறியதாக குற்றம் சாட்டுகிறது.

ட்விட்டர் நிறுவனம், அதன் வருவாயில் பெரும் பகுதியை அதன் தளத்தில் விளம்பரம் செய்வதன் மூலம் பெறுகிறது. இது சராசரி நுகர்வோர்கள், பிரபலங்கள், பெருநிறுவனங்கள் என பல்வேறு பயனர்களை 280 எழுத்துகள் வரையிலான பதிவுகளை ட்வீட் செய்ய அனுமதிக்கிறது.

எஃப்டிசி சார்பாக நீதித்துறை தாக்கல் செய்த புகாரின்படி, 2013ஆம் ஆண்டில் ட்விட்டர் பயனர்களின் கணக்கை மேம்படுத்துவதற்காக கைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை வழங்குமாறு பயனர்களிடம் கேட்கத் தொடங்கியது.

"புகாரில் குறிப்பிட்டு இருப்பதன்படி, ட்விட்டர் நிறுவனம் பாதுகாப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் சாக்கில் பயனர்களிடம் தரவுகளைப் பெற்றது. பிறகு பயனர்களைக் குறிவைத்து விளம்பரங்களைக் கொண்டு செல்ல அந்தத் தரவுகளைப் பயன்படுத்தியது.

இந்த நடைமுறை 140 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் பயனர்களைப் பாதித்தது. அதேநேரத்தில், ட்விட்டரின் முதன்மையான வருவாய் அதிகரித்தது," என்று எஃப்டிசியின் தலைவர் லினா கான் கூறினார்.

ட்விட்டர் பயனர்களின் நம்பிக்கையை உடைத்துள்ளது
கணினி பாதுகாப்பு நிறுவனமான செக்யூர் டீமின் நிர்வாக இயக்குநர் இயன் ரெனால்ட்ஸ் பிபிசியிடம், "பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைத் தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்தி அவர்களின் வருவாயை அதிகரித்ததன் மூலம், ட்விட்டர் நிறுவனம் மீண்டுமொரு முறை, ட்விட்டர் பயனர்கள் அந்த நிறுவனத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை உடைத்துள்ளது," என்று கூறினார்.

மேலும் அவர், "ட்விட்டர் தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய தரவுகளைப் பெறுவதன் மூலம் தனியுரிமை பாதுகாப்பை உறுதி செய்வதாக தவறான பாதுகாப்பு உணர்வுக்கு இட்டுச் சென்றது. ஆனால், இறுதியில் தங்கள் பயனர்களை அது விளம்பரங்கள் மூலமாகக் குறி வைக்க அந்தத் தரவுகளைப் பயன்படுத்தியது.

பயனர்களின் தரவுகள் மீது நிறுவனங்களுக்கு இன்னமும் இருக்கும் அதிகாரத்தை இது காட்டுகிறது. அதோடு, பயனர்கள் தங்கள் சொந்த டிஜிட்டல் தடயங்களின் மீது முழு கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளார்கள் என்ற நம்பிக்கை வருவதற்கான பாதையில் செல்லவேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது," என்றார்.

பயனர்கள், தங்களது ட்விட்டர் கணக்கை அங்கீகரிப்பதற்காக, ட்விட்டருக்கு கைபேசி எண்ணையும் மின்னஞ்சல் முகவரியையும் வழங்க வேண்டும்.

அவற்றை, தங்கள் கடவுச் சொற்களை மீட்டமைக்கவும் இரண்டு கட்ட ஒப்புதல் அங்கீகாரத்தை இயக்கவும் அது பயனர்களுக்கு உதவுகிறது.

பயனர் பெயர், கடவுச் சொல் ஆகியவற்றுடன் ட்விட்டரில் உள்நுழைய பயனர்களுக்கு உதவ, கைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு குறியீட்டை அனுப்புவதன் மூலம் இரண்டு கட்ட ஒப்புதல் அங்கீகாரம்

பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லுடன் ட்விட்டரில் உள்நுழையும் பயனர்களின் கைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு குறியீட்டை அனுப்புவதன் மூலம் மேற்கொள்ளப்படும் இரண்டு கட்ட ஒப்புதல் அங்கீகாரம் கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.

ஆனால், எஃப்டிசியின் கூற்றுப்படி, குறைந்தபட்சம் செப்டம்பர் 2019 வரை, ட்விட்டர் அதன் விளம்பரங்கள் சார்ந்த வணிகத்தை அதிகரிக்க அந்தத் தரவுகளைப் பயன்படுத்தியது.

பயனர்களின் பாதுகாப்பு தரவுகளை அணுகுவதற்கு விளம்பரதாரர்களை ட்விட்டர் அனுமதிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இப்போது விதிக்கப்பட்டுள்ள அபராதத்தோடு கூடுதலாக, ட்விட்டர் மேலும் சிலவற்றைக் கண்டிப்பாகச் செய்தாக வேண்டும்.

சட்டவிரோதமாக சேகரித்த கைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்

பாதுகாப்பு தரவுகளின் முறையற்ற பயன்பாடு குறித்து பயனர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்

எஃப்டிசி சட்ட அமலாக்க நடவடிக்கையைப் பற்றி பயனர்களிடம் கூற வேண்டும்

தனிப்பட்ட முறையில் குறிவைக்கப்படும் விளம்பரங்களை எவ்வாறு முடக்குவது என்பதையும் பல கட்ட அங்கீகார அமைப்புகளை மதிப்பாய்வு செய்வது எப்படி என்பதையும் விளக்க வேண்டும்

கைபேசி எண் தேவையில்லாத பல கட்ட அங்கீகார விருப்பங்களை வழங்க வேண்டும்

30 நாட்களுக்குள் இத்தகைய சம்பவங்களை எஃப்டிசி-க்கு புகாரளிப்பதை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்

"நுகர்வோரின் முக்கியமான தரவுகளின் தனியுரிமையைப் பாதுகாக்க நீதித்துறை உறுதிபூண்டுள்ளது," என்று அமெரிக்க இணை அட்டர்னி ஜெனரல் வனிதா குப்தா கூறினார்.

மேலும், "150 மில்லியன் டொலர் அபராதம் ட்விட்டருக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைப் பிரதிபலிக்கிறது. மேலும் முன்மொழியப்பட்ட தீர்வின் விளைவாக விதிக்கப்படும் கணிசமான புதிய நடவடிக்கைகள் பயனர்களின் தனியுரிமையை அச்சுறுத்தும் தவறாக வழிநடத்தக்கூடிய தந்திரங்களைத் தடுக்க உதவும்," என்றும் கூறினார்.

No comments:

Post a Comment