'நாடு கடத்தப்பட்டவர்' இன்று பாகிஸ்தானின் புதிய பிரதமராக தெரிவு - யார் இவர்? - News View

About Us

About Us

Breaking

Monday, April 11, 2022

'நாடு கடத்தப்பட்டவர்' இன்று பாகிஸ்தானின் புதிய பிரதமராக தெரிவு - யார் இவர்?

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீஃபின் சகோதரரான ஷெபாஸ் ஷெரீப் நாட்டின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பிரதமர் பதவிக்காக எதிர்க்கட்சிகள் முன்மொழிந்த கூட்டு வேட்பாளராக இருந்தார். ஏப்ரல் 11 ஆம் திகதி (திங்கட்கிழமை) பிற்பகலில் பாகிஸ்தான் தேசிய அவையான அதன் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டபடி அவர் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார்.

வாக்கெடுப்பில் ஷெபாஸ் ஷெரீப்புக்கு 174 வாக்குகள் கிடைத்தன. இம்ரான் கானின் பிடிஐ கட்சி முன்மொழிந்த பிரதமர் வேட்பாளரான முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை.

முன்னதாக, திங்கட்கிழமை காலையில் நாடாளுமன்ற அமர்வு தொடங்கியவுடன், இம்ரான் கானின் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தனர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான், "அமெரிக்க உத்தரவின் பேரில் நாட்டில் நடக்கும் 'சதி'யால் நான் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளேன்," என்று கூறி வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தேசிய அவையில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இம்ரான் கானுக்குப் பதிலாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் இப்போது நாட்டின் புதிய பிரதமராக உள்ளார்.

ஹவாலா பரிவர்த்தனை தொடர்பான வழக்கு ஷெபாஸ் ஷெரீப் மீது நிலுவையில் உள்ளது. அந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 27ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. அந்த வழக்கில் ஷெபாஸ் ஷெரீப்பை ஏப்ரல் 27ஆம் திகதி வரை கைது செய்ய ஏற்கெனவே நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த ஷெபாஸ் ஷெரீப் யார் தெரியுமா?
"நீங்கள் எல்லா பூக்களையும் வெட்டலாம், ஆனால் வசந்தம் வருவதை உங்களால் தடுக்க முடியாது."

இம்ரான் கான் மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை எதிர்கொண்ட நேரத்தில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் இவ்வாறு கூறினார்

இம்ரானின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குரியாகியிருந்த சமீபத்திய வாரங்களில் தனது அரசை காப்பாற்ற அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டியிருந்தது. ஆனால் அவரால் அதை செய்யமுடியவில்லை. 

இப்போது எதிர்க்கட்சிகளின் முகமாக இருக்கும் ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பிரதமரின் முகமாக வாக்கெடுப்பு நடைமுறைகளின்போதே அடையாளம் காணப்பட்டார்.

ஒருவேளை ஷெபாஸ் ஷெரீப் இதே நம்பிக்கையுடன் 'பூக்கள் மற்றும் நீரூற்றுகளைப்' பற்றி அப்போது பேசியிருக்கலாம்.

ஷெபாஸ் ஷெரீப் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஆவார். ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் இருந்த பின்னர் விடுதலையான நவாஸ் ஷெரீப் பிறகு நாடு திரும்பவில்லை. அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் அரசை தோற்கடித்த பிறகுதான் இம்ரான் கான் பதவிக்கு வந்தார்.

ஷெபாஸ் ஷெரீப் பலமுறை பாகிஸ்தானின் அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். ஆனால் அவர் தனது சகோதரர் நவாஸ் ஷெரீப்புடன் இணைந்திருந்த தனது வழியை மாற்றிக் கொள்ளவில்லை.

பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றது முதல் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது வரையிலான கதை மிகவும் சுவாரசியமானது.

ஷெபாஸ் ஷெரீப் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் உரையாற்றும்போது அடிக்கடி புரட்சிக் கவிதைகளை கூறுவார். பொது நிகழ்ச்சிகளில் பேசும் போது சுல்ஃபிகர் அலி புட்டோ மைக்கை கீழே தள்ளிவிடுவதைப்போல இவரும் அதை நகல் செய்வார். இதற்காக பாகிஸ்தான் தொலைக்காட்சி சனல்களில் அவர் கேலி செய்யப்பட்டுள்ளார்.

புகழ்பெற்ற வணிக குடும்பத்தில் பிறப்பு
ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புகழ்பெற்ற வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். ஷெபாஸ் ஷெரீப் காஷ்மீரி வம்சாவளியைச் சேர்ந்த பஞ்சாபி என்று டெய்லி டைம்ஸ் இணையத்தளம் கூறுகிறது. இவர் ஜம்மு காஷ்மீரின் மியான் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.

ஷெரீப் குடும்பம் காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கில் வசித்தவர்கள். வணிகம் காரணமாக அமிர்தசரஸில் (அம்ரித்சர்) உள்ள ஜடி உம்ரா கிராமத்திற்கு அவர்கள் இடம்பெயர்ந்தனர். அதன் பின்னர் இந்தக் குடும்பம் அம்ரித்ஸரில் இருந்து லாகூருக்கு குடிபெயர்ந்தது. ஷெபாஸ் ஷெரீப்பின் தாயின் குடும்பம் காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்ததாகும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளியிடப்பட்ட செய்தி தெரிவிக்கிறது.

தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, பாகிஸ்தானில் தனது தந்தை முகம்மது ஷெரீப்பால் தொடங்கப்பட்ட இத்தெஃபாக் குழுமத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். 

'Ittefaq Group' என்பது பாகிஸ்தானின் மிகப்பெரிய வணிகக் குழுவாகும். இதில் எஃகு, சர்க்கரை, ஜவுளி, பலகைத் தொழில்கள் ஆகியவை அடங்கும் என்றும் ஷெபாஸ் ஷெரீப் இந்த குழுமத்தின் இணை உரிமையாளர் என்றும் Dawn இணையத்தளம் தெரிவிக்கிறது.

பிபிசியிடம் பேசிய பாகிஸ்தானின் அரசியல் ஆய்வாளர் சுஹைல் வாராய்ச், "ஷெபாஸ் ஷெரீப் ஒரு பிரபலமான குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில், அவர் தனது மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீப்பின் வேலைகளில் உதவினார். பின்னர் தனது சகோதரரின் உதவியுடன் அரசியலில் நுழைந்தார்," என்று கூறினார்.

அரசியலில் நுழைவு
ஷெபாஸ் ஷெரீப் 1985 இல் லாகூர் வர்த்தக மற்றும் தொழில் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது அரசியல் பயணம் 1988 ஆம் ஆண்டு பஞ்சாப் மாகாண சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது தொடங்கியது. ஆனால் சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. அவர் தனது பதவிக் காலத்தை முடிக்க இயலவில்லை.

இதையடுத்து ஷெபாஸ் ஷெரீப் தேசிய அரசியலில் கால் பதித்தார். 1990 இல், அவர் பாகிஸ்தானின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் பதவியேற்ற நேரம் இது. நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்த காலம் முழுவதும் ஷெபாஸ் ஷெரீப் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

இராணுவத்தின் அழுத்தம் அதிகரித்ததால், 1993 இல் பிரதமர் நாற்காலியில் இருந்து நவாஸ் ஷெரீப் விலக நேரிட்டது. அதே ஆண்டில், ஷெபாஸ் ஷெரீப் பஞ்சாப் மாகாண சட்டப்பேரவை உறுப்பினராக ஆனார். 1996 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 1997 இல், அவர் மூன்றாவது முறையாக பஞ்சாப் மாகாண சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதலமைச்சரானார்.

ராணுவம் ஆட்சியை கைப்பற்றியபோது கைது செய்யப்பட்டார்
பஞ்சாப் முதல்வராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி நடந்தது. 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் திகதி மாலை, பாகிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஜெனரல் பர்வேஸ் முஷாரப் கவிழ்த்தார். இந்த நிலையில், ஷெபாஸ் ஷெரீப்பும் கைது செய்யப்பட்டார்.

2000 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஷெபாஸ் ஷெரீப்பின் மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீப்புக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஜெனரல் முஷாரஃபின் விமானத்தை கடத்தியதற்காகவும், பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரிலும் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. சுமார் எட்டு மாதங்களுக்குப் பிறகு, பாகிஸ்தானின் இராணுவ அரசு நவாஸ் ஷெரீப்புக்கு மன்னிப்பு அளித்தது. 

40 குடும்ப உறுப்பினர்களுடன் நவாஸ், சவூதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்த 40 பேரில் ஷெபாஸ் ஷெரீப்பும் ஒருவர்.

பாகிஸ்தானில் கைது செய்யப்படும் அபாயம் இருந்தபோதிலும் ஷெபாஸ், அபுதாபியில் இருந்து விமானம் மூலம் 2004 இல் லாகூர் வந்தார். சில மணி நேரத்திலேயே அவர் சவூதி அரேபியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.

மீண்டும் பாகிஸ்தான் திரும்பினார்
2007 ஆகஸ்ட் 23 ஆம் திகதி அன்று, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. அதில் ஷெபாஸ் ஷெரீப்பும் நவாஸ் ஷெரீப்பும் பாகிஸ்தானுக்குத் திரும்பி தேசிய அரசியலில் பங்கேற்கலாம் என்று கூறியது என்று பாகிஸ்தானின் தொலைக்காட்சி சனலான ஜியோ நியூஸ் குறிப்பிடுகிறது.

2007 நவம்பரில் நவாஸ் ஷெரீப்புடன் ஷெபாஸ் ஷெரீப்பும் பாகிஸ்தானுக்குத் திரும்பினார். 2008 இல், நவாஸ் ஷெரீப்பின் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) க்கு நிறைய இடங்கள் கிடைத்தன. ஆனால் அக்கட்சியால் அரசை அமைக்க முடியவில்லை.

மறுபுறம், 2008 இல், ஷெபாஸ் ஷெரீப் நான்காவது முறையாக பஞ்சாப் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பஞ்சாப் முதல்வராக இருந்தார்.

பாகிஸ்தானில் கடந்த 2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. நவாஸ் ஷெரீப்பின் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) பஞ்சாப் மாகாணத்தில் அமோகமான வெற்றியுடன் ஆட்சியைப் பிடித்தது. 

பஞ்சாப் முதல்வராக ஷெபாஸ் ஷெரீஃப் தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுபுறம், மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீப் பிரதமர் பதவியை கைப்பற்றினார். 

ஷெபாஸ் ஷெரீப், முதலமைச்சர் என்பதைக்காட்டிலும், பஞ்சாபின் தலைமைப் பணியாளர் என்று அறியப்படுவதையே விரும்புகிறார்.

லாகூரின் உருவம் மாறியது
ஷெபாஸ் ஷெரீப் ஒரு நல்ல மேலாளராக இருந்ததாக பாகிஸ்தான் அரசியல் ஆய்வாளர் சுஹைல் வாராய்ச் கருதுகிறார். "ஷெபாஸ் ஷெரீப் லாகூர் மட்டுமல்ல, பஞ்சாப் முழுவதையும் மாற்றும் வேலையைச் செய்துள்ளார். அவர் பஞ்சாபின் வளர்ச்சிக்காக பாராட்டப்படுகிறார். மெட்ரோ பஸ் மற்றும் ஆரஞ்சு ரயிலுக்கான பெருமை அவரையே சாரும்," என்று பிபிசியிடம் பேசிய அவர் கூறினார்.

ஷெபாஸ் ஷெரீப் 'சஸ்தி ரொட்டி' (மலிவான உணவு) மற்றும் 'லேப்டாப் யோஜனா' ஆகியவற்றைத் தொடங்கினார். இது நிறைய விமர்சிக்கப்பட்டது. மறுபுறம் அவர் ஆஷியானா வீட்டுத் திட்டத்திற்காக பாராட்டப்பட்டார்.

நவாஸ் ஷெரீப் கட்சியின் தலைவராக இருக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், கட்சியின் இடைக்காலத் தலைவராக ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பல மாதங்கள் சிறையில் கழித்தார்
2018 பொதுத் தேர்தலில், PML-N தனது பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப்பை அறிவித்தது. இந்த பொதுத் தேர்தலில் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து, பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். ஷெபாஸ் ஷெரீப் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2020 ஆம் ஆண்டில், ஷெபாஸ் ஷெரீப்பின் முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட பின்னர், பண மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். லாகூரில் உள்ள கோட் லக்பத் மத்திய சிறையில் சுமார் 7 மாதங்கள் கழித்த பிறகு அவர் விடுதலையானார் என்று பாகிஸ்தான் செய்தித்தாள் டானின் இணையத்தளம் தெரிவிக்கிறது.

ஷெபாஸ் தனது மகன்கள் ஹம்சா மற்றும் சல்மான் ஆகியோர் பெயரிலான போலி கணக்குகள் மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாக, இம்ரான் கானின் ஆலோசகர் ஷாஜாத் அக்பர் குற்றம் சாட்டியிருந்தார். இம்ரான் கானின் சதித்திட்டம் காரணமாக தான் கைது செய்யப்பட்டதாக ஷெபாஸ் ஷெரீப் கூறினார்.

இம்ரானுக்கு எதிராக அணிதிரட்டல்
2021ஆம் ஆண்டு மே 24ஆம் திகதி நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் எதிர்க்கட்சித் தலைவர்களை இரவு உணவிற்கு அழைத்த நாள். இந்த சந்திப்பு இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இந்த விருந்தில், பாகிஸ்தானில் ஆட்சியில் உள்ள இம்ரான் தலைமையிலான அரசை அகற்ற ஓரணியில் ஒன்றிணையுமாறு ஷெபாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்குப் பிறகு எதிர்க்கட்சிகள் பல்வேறு முனைகளில் இருந்து இம்ரான் கானின் அரசை சுற்றி வளைத்தன. சமீப காலமாக, பாகிஸ்தான் அரசியலில் எல்லா விதமான பகடை விளையாட்டும் விளையாடப்பட்டன. 

தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பல கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றாக திரும்பப் பெற்றன. இம்ரான் கானின் அரசு சிறுபான்மை அரசாக ஆனது.

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 342 எம்.பி.க்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 172 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்பட்டது. இந்த எண்ணிக்கையின் பலத்தில் எதிர்க்கட்சிகள் இம்ரான் கானை ஆட்சியில் இருந்து அகற்றின.

ஷெபாஸ் ஷெரீபின் இராணுவத்துடனான உறவு குறித்து பிபிசியிடம் பேசிய பாகிஸ்தானின் அரசியல் ஆய்வாளர் சுஹைல் வாராய்ச், "மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீப்பை ஒப்பிடும்போது ஷெபாஸ் ஷெரீப், ராணுவத்துடன் ஆரம்பத்தில் இருந்தே சிறந்த உறவைக் கொண்டுள்ளார். அவர் நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். அவர் நல்ல ஆளுநராக இருந்துள்ளார். அவருடைய கட்டுப்படுத்தும் திறன் மிகவும் நன்றாக இருக்கிறது," என்று குறிப்பிட்டார்.

தந்தையின் அடிச்சுவடுகளில் மகன்
அரசியல் ஆய்வாளர் சுஹைல் வாராய்ச் ஷெபாஸ் ஷெரீப்பின் சொந்த வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், "2003 ஆம் ஆண்டில், ஷெபாஸ் ஷெரீப் தெஹ்மினா துரானியை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் அவருக்கு குழந்தைகள் இல்லை. முதல் திருமணத்தில் இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டாவது திருமணம் மூலம் ஒரு மகள் இருக்கிறார். பெரும்பாலான நேரங்களில் அவர் தனது முதல் மனைவியுடன் தங்யிருப்பார்," என்று கூறினார்.

ஷெபாஸ் ஷெரீப்பின் மகன் ஹம்சா ஷெரீப் 1974 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் திகதி லாகூரில் பிறந்தார். லாகூரில் உள்ள அரசு கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில் எல்எல்பி பட்டம் பெற்றார்.

ஹம்சா ஷெரீப் , 2008-13 மற்றும் 2013-18 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தற்போது, பஞ்சாப் மாகாண சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். பஞ்சாப் விளையாட்டு வாரியத்தின் தலைவராகவும் அவர் இருந்துள்ளார்.

No comments:

Post a Comment