(நா.தனுஜா)
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்காவைப் பின்பற்றி பிரிட்டன் அரசாங்கமும் தடை விதிக்க வேண்டும் என்று அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் விரேந்திர ஷர்மா வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டிருப்பதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கையின் தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரிட்டன் அரசாங்கம் 'மெக்னிற்ஸ்கி' முறையிலான தடையை விதிக்க வேண்டும் என்று அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரிட்டனின் வெளிவிவகாரச் செயலாளரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள மெக்னிற்ஸ்கி சட்டத்தின் ஊடாக மனித உரிமை மீறல்கள் மற்றும் பாரிய ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு எதிராகத் தடை விதிக்க முடியும் என்பதுடன் அவர்களின் சொத்துக்களையும் முடக்க முடியும்.
அதன்படி ஏற்கனவே பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்த நிலையில், தற்போது பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் விரேந்திர ஷர்மாவும் சவேந்திர சில்வாவிற்கு எதிரான தடைக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.
அதுமாத்திரமன்றி இலங்கையில் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட ஏனைய நபர்களுக்கு எதிராகத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.
ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க் குற்றவாளிகளுக்கு எதிராகத் தடை விதிக்கப்படுவதற்கான அழுத்தத்தை வழங்கும் வகையிலான பிரசாரமொன்றை சர்வதேச நாடுகளைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் மற்றும் தமிழ் சிவில் செயற்பாட்டாளர்கள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
அப்பிரசாரம் குறித்து நிகழ்நிலை கலந்துரையாடலொன்றின் மூலம் விரேந்திர ஷர்மாவிற்குத் தெளிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சவேந்திர சில்வாவிற்கு எதிரான தடையை வலியுறுத்தி அவர் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
'இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட கட்டளைத் தளபதிகளில் ஒருவரான ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக தடை விதிக்குமாறு பிரிட்டன் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றேன்.
இலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது இடம்பெற்ற போர்க் குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றார். சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக அமெரிக்கா ஏற்கனவே பயணத் தடை விதித்திருக்கும் நிலையில், அதனை பிரிட்டன் பின்பற்ற வேண்டும்.
இலங்கையில் இடம்பெற்ற இனப் படுகொலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்டுவதில் தாம் கொண்டிருக்கும் கடப்பாட்டை நிரூபிப்பதற்கு ஏற்றவாறான நடவடிக்கைகளை பிரிட்டன் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்' என்று அவர் அக்காணொளியில் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை விரேந்திர ஷர்மாவுடனான நிகழ்நிலை கலந்துரையாடலில், இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டு தற்போது அவரது தொகுதியில் வசிக்கும் சிலரும் பங்கேற்றிருந்ததுடன் தமது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தனர். அதற்குப் பதிலளித்த விரேந்திர ஷர்மா, இவ்விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment