மின் துண்டிப்பு நேரத்தை குறைத்து, சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்ய செயற்திட்டமொன்று அமைச்சரவையில் முன்வைப்பு - டலஸ் அழகப்பெரும - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 8, 2022

மின் துண்டிப்பு நேரத்தை குறைத்து, சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்ய செயற்திட்டமொன்று அமைச்சரவையில் முன்வைப்பு - டலஸ் அழகப்பெரும

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு நாளை வியாழக்கிழமையுடன் நிரந்த தீர்வு வழங்கப்படும். மேலும் கோடை காலம் நிறைவடையும் வரை மின் துண்டிப்பு நேரத்தை குறைத்து, சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்வதற்கான செயற்திட்டமொன்றும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

எரிபொருள் நெருக்கடியின் காரணமாக அன்றாடம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற மின் துண்டிப்பினால் மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கான தீர்வு குறித்து செவ்வாய்க்கிழமை (8) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்டது. இதன் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், எரிபொருள் தட்டுப்பாட்டினால் அனல் மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தி முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

மாதாந்தம் எரிபொருள் இறக்குமதிக்காக மாத்திரம் 400 மில்லியன் டொலர் செலவிடப்படுகிறது. அதாவது நாளாந்தம் 13 மில்லியன் டொலர் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படுகிறது.

இவ்வாறான பாரிய செலவுகளை குறைக்கும் நோக்கில் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் ஊடான மின் உற்பத்தி தொடர்பில் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதிக அவதானம் செலுத்தப்பட்டது.

மேலும் மின் துண்டிப்பின் காரணமாக மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக எம்பிலிபிட்டி மற்றும் சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை துரிதமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வியாழக்கிழமை முதல் நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு நிரந்த தீர்வு வழங்கப்படும் என்று அமைச்சரவையில் அமைச்சர் காமினி லொக்குகே உறுதியளித்தார்.

அத்தோடு மின் துண்டிப்பின் காரணமாக மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு, கோடை காலம் நிறைவடையும் வரை மின் துண்டிப்பு காலத்தை குறைத்து, உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதற்கான செயற்திட்டமொன்றை மின்சக்தி அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.

அதற்கமைய மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு துரிதமான தீர்வினை வழங்கக் கூடிய சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது என்றார்.

No comments:

Post a Comment