(இராஜதுரை ஹஷான்)
மின்சாரம் மற்றும் எரிபொருள் ஆகிய முக்கிய சேவைகளில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ சிறந்த திட்டத்தை செயற்படுத்தவில்லை. சமூக பிரச்சினையை தீவிரப்படுத்தி இலங்கையை மேற்குலக நாடுகளிடம் அடிபணிய வைக்கும் நோக்கில் நிதியமைச்சர் செயற்படுகிறார் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
புதுக்கடை நீதிமன்றிற்கு வருகை தந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக பங்காளி கட்சிகளை ஒன்றிணைத்து அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்தோம். பொருளாதார பாதிப்பை ஒட்டு மொத்த மக்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எம்மை அமைச்சு பதவியில் இருந்து நீக்கினால் வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடிக்கு தீர்வு பெற்றுக் கொள்ள முடியுமா,பொருளாதார பாதிப்பில் இருந்து நாட்டை மீட்பதற்கு உரிய தரப்பினர் கவனம் செலுத்தவில்லை.
குறிப்பாக நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரச்சினைகளுக்கு தீர்வு காண எவ்வித திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.
கடந்த 5ஆம் திகதிக்கு பின்னர் நாடு தழுவிய ரீதியில் சுழற்சி முறையில் மின் விநியோகம் தடை செய்யப்படாது என குறிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது வழமையை காட்டிலும் அதிக மணி நேரம் மின் விநியோக துண்டிப்பு அமுல்படுத்தப்படுகிறது.
எரிபொருள், மின்சாரம் ஆகிய முக்கிய சேவையில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காண நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ உரிய திட்டங்களை செயற்படுத்தவில்லை.
சமூக பிரச்சினையை தீவிரப்படுத்தி இலங்கையை மேற்குலக நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் நோக்கத்தில் இருந்துக் கொண்டு அவர் செயற்படுகிறார்.
நாடும், நாட்டு மக்களும் எதிர்கொண்டுள்ள அவலநிலைமை தொடர்பில் கவனம் செலுத்தாமல் இருக்க முடியாது என்பதற்காகவே மக்கள் மத்தியில் உண்மைகளை பகிரங்கப்படுத்தினோம் என்றார்.
No comments:
Post a Comment