எமது மீனவர்களின் அழிவுக்கு கடற்படையும், அரசாங்கமுமே முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - News View

About Us

About Us

Breaking

Friday, February 11, 2022

எமது மீனவர்களின் அழிவுக்கு கடற்படையும், அரசாங்கமுமே முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வடக்கு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து இந்தியா நேரடியாக எமக்கு உறுதிமொழி வழங்க முடியுமென்றால் இலங்கை அரசாங்கத்தினால் ஏன் எமது மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வாக்குறுதிகளை வழங்க முடியாதுள்ளது. எமது மீனவர்களின் அழிவுக்கு கடற்படையும் அரசாங்கமுமே முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், மாகாணசபைகளை (முத்திரைத் தீர்வையை கைமாற்றுதல்) திருத்த சட்டமூலம் ஆகியவற்றின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், வடக்கு மாகாண மீனவர்கள் தமது நாளாந்த வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எமது கடற் பரப்பிற்கு அப்பால் உள்ள மக்கள் எமது எல்லைக்குள் வருவதுடன் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். அதுமட்டுமல்லாது எமது வடக்கு மாகாண மீனவர்களின் மீன்பிடி வளங்களையும் சேதப்படுத்தும் நிலைமை காணப்படுகின்றது.

வட மாகாணத்தை பொறுத்தவரை 50 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடி துறையுடன் நேரடியான தொடர்பில் உள்ளனர். இருநூறு ஆயிரம் தனி நபர்கள் நேரடியாக மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை 23 ஆயிரம் மீனவ குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தனி நபர்கள் நேரடியாக மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர்.

எனினும் வடக்கு மாகாணத்தைச் சாராத இலங்கை மீனவர்கள் இலங்கை கடற்படை மற்றும் பாதுகாப்புப் படைகளின் அனுமதியுடன் வருவதுடன், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதனால் எமது உள்ளூர் மீனவர்கள் அதிக துன்பங்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

அதேபோல் இந்தியாவின் குறிப்பாக தமிழ்நாடு மீனவர்கள் சட்ட விரோதமாக எமது எல்லைக்குள் வருகை தந்து மீன்பிடியில் ஈடுபடுவது குறித்தும் தொடர்ச்சியாக நாம் முறையிட்டுள்ளோம். மீன்பிடித்துறை அமைச்சின் குழுக்களிலும், பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்திலும் தெரிவித்துள்ளோம்.

வடக்கிற்கு வெளியில் உள்ள மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடுகள் காரணமாக சேதமாக்கப்பட்டுள்ள எமது மீனவர்களின் சொத்துக்கள் 600 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும். யாழ்ப்பாணத்தை எடுத்துக் கொண்டால் 250 மில்லியன் ரூபா அளவிலான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனை அரசாங்கம் கண்மூடித்தனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது.

மீன்பிடித்துறை அமைச்சரை எடுத்துக் கொண்டாலும் அவர் வடக்கு மக்களின் வாக்குகளில் தெரிவாகி இந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். அவ்வாறு வந்து அரசாங்கத்தின் முன் வரிசையில் அமர்ந்து கொண்டு இந்த அழிவை வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளார். இது மக்களின் ஆத்திரத்தை அதிகரிக்கும் செயற்பாடாக அமைந்துள்ளது.

முதுகெலும்பு இல்லாத ஒரு அமைச்சராக, பாதுகாப்பு படைகளுடன் இணைந்து கொண்டு எமது மக்களின் அழிவை வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளார். இந்த விடயங்களை முன்னிலைப்படுத்தி சபை ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றினை கொண்டுவர நடவடிக்கை எடுத்தோம். அதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்ட பின்னரும் இறுதி நேரத்தில் இந்திய தூதரகத்தின் வலியுறுத்தலுக்கு அமைய அதனை கைவிட வேண்டியதாகிட்டு.

இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், மீனவர்கள் பிரச்சினை குறித்து நாம் இங்கு ஒரு நடவடிக்கை எடுக்கும் வேளையில் வெளிநாடொன்று எம்மை தொடர்பு கொண்டு அதனை முன்னெடுக்க வேண்டாம் என எமக்கு உறுதிமொழி வழங்குகின்றது.

ஆனால் வடக்கு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய அரசாங்கம் அது குறித்து வாக்குறுதியை வழங்காது வேடிக்கை பார்க்கின்றது. குறிப்பாக மீன்பிடித்துறை அமைச்சர் வாய் மூடி இருப்பது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

வடக்கு கிழக்கு மீனவர்களின் நலன்களை கவனத்தில் கொள்ளாது கடற்படை வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது. ஆகவே இந்த அழிவுக்கு கடற்படையும் அரசாங்கமுமே முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும். திட்டமிட்ட இன அழிப்புக்கு இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக துணை நின்று கொண்டே உள்ளது என்றார்.

No comments:

Post a Comment