உலக நம்பர் வன் டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச்சின் விசாவை அவுஸ்திரேலிய அரசாங்கம் இரண்டாவது முறையாகவும் வெள்ளிக்கிழமை இரத்து செய்துள்ளது. இதனால் அவர் 2022 அவுஸ்திரேலிய ஓபனில் பங்கெடுப்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அவுஸ்திரேலியா ஒபன் எதிர்வரும் திங்கட்கிழமை மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே நாட்டிற்குள் அனுமதி என அவுஸ்திரேலியா அரசு தெரிவித்த நிலையில், ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தாமல் சென்றார். அவரை மெல்போர்ன் விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரது விசாவை இரத்து செய்து மெல்போர்னில் தடுப்பு காவலில் வைத்திருந்தனர்.
இதனிடையே அவுஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் எனக்கோரி ஜோகோவிச் மெல்போர்னில் உள்ள பெடரல் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரணை முடிவில் ஜோகோவிச் விசாவை இரத்து செய்த அவுஸ்திரேலிய அரசின் முடிவை இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், தீர்ப்பு வெளியான அடுத்த 30 நிமிடங்களில் தடுப்புக் காவல் மையத்திலிருந்து ஜோகோவிச்சை விடுவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
ஆனால், குடியேற்ற அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே, தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி விசாவை இரத்து செய்ய முடியும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் குடியேற்ற அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை மறுபடியும் இரத்து செய்துள்ளார்.
இதன் மூலம் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து அலெக்ஸ் ஹாவ்கே கூறுகையில், இன்று நான் குடியேற்றச் சட்டத்தின் 133C(3) பிரிவின் கீழ் எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நோவக் ஜோகோவிச் வைத்திருந்த விசாவை பொது நலன் கருதி, உடல் நலம் மற்றும் நல்ல ஒழுங்கு அடிப்படையில் இரத்து செய்தேன் என்றார்.
இதேவேளை, அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் , செர்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச்சின் விசா நிலையைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளார். அதுபற்றிக் குடிவரவு அமைச்சர் முடிவெடுப்பார் என்று பிரதமர் மோரிசன் கூறினார்.
அவுஸ்திரேலியப் பகிரங்க டென்னிஸ் போட்டியில் பார்வையாளர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்படுகிறது. நோய்த் தொற்றுக் கட்டுப்பாடுகள் காரணமாக, மொத்தமுள்ள பார்வையாளர் எண்ணிக்கையில் 50 வீதத்தினர் மட்டுமே போட்டிகளைக் காண அனுமதிக்கப்படுவர்.
மெல்பர்ன் நகரில் கிருமிப்பரவல் மோசமாகி வருகிறது. போட்டிகளுக்கு அனுமதிக்கப்படும் அனைவரும், உணவு உண்ணும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயம். சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகளும் அங்கு நடப்பில் இருக்கும்.
நேற்றுமுன்தினம் மெல்பர்ன் நகரில் 37,169 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது. மேலும் 25 பேர் மாண்டனர்.
இந்நிலையில் வரும் திங்கட்கிழமை தொடங்கும் அவுஸ்திரேலியப் பகிரங்க டென்னிஸ் போட்டியில், ஆண்கள் பிரிவின் நடப்பு வெற்றியாளர் நோவாக் ஜோகோவிச் பங்கேற்பது குறித்த சர்ச்சை இன்னும் தொடர்கிறது.
இவ்வாறான பின்னணியில் நோவக் ஜோகோவிச் சனிக்கிழமையன்று அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகளுடன் ஒரு நேர்காணலுக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment