பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக நிந்தவூரைச் சேர்ந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் அலியார் றபீக் CI [Chief Police Inspector] பதவியுயர்வு பெற்று தனது கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான A.றபீக் (CI) கடந்த 33 வருடங்களாக பாதுகாப்புத் துறையில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய நிருவாகத்துறையில் ஆளுமையுள்ள ஒருவராவார்.
இலங்கையின் பொலிஸ் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் இவர், நாட்டின் பல பாகங்களிலும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றியுள்ளதோடு, நாட்டின் பல பொலிஸ் நிலையங்களில் பல முக்கிய பிரிவுகளில் பதவியமர்த்தப்பட்டு திறன்பட சேவையாற்றி பொலிஸ் உயரதிகாரிகளின் பாராட்டினையும் பெற்றுள்ளார்.
அந்த வகையில், தனது ஆரம்ப பொலிஸ் சேவையினை கொழும்பிலும் பின்னர் மொனறாகலை, தனமன்வில, வீரக்கொடையிலும் குறிப்பாக, பயங்கரவாதம் தலைதூக்கிய சந்தர்ப்பத்தில் தாய்நாட்டுக்காய் தன்னை அர்ப்பணித்து நாட்டின் பல பாகங்களிலும் கடமையாற்றியிருந்தார்.
அத்தோடு, தங்கலையில் உப பொலிஸ் பரிசோதகராகவும் (SI) அதன் பின்னர் வெல்லவாயவில் பொலிஸ் பரிசோதகராக (IP) பதவியுயர்வு பெற்று அங்கு கடமையாற்றியதோடு, பின்னர் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காஸிம் (MP) அவர்களது மெய்ப் பாதுகாவலராக எட்டு வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.
இறுதியாக, கல்முனை பொலிஸ் நிலையத்தில் கல்முனை நீதிமன்றத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
தனது சேவைக் காலத்தில் பொலிஸ் நிருவாகப் பிரிவில் கூடிய அனுபவம் வாய்ந்தவராகக் காணப்படுவதோடு, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் நிருவாகப் பிரிவு (Administrative Unit) பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய நிலையிலேயே கடந்த 2020.05.08ம் திகதியன்று பிரதம பொலிஸ் பரிசோதகராக பதவியுயர்வு வழங்கப்பட்டது.
முன்னாள் கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகச் செயற்பட்ட கே.எச்.சுஜீத் பிரியந்த இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து நிலவிய பதவி வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
No comments:
Post a Comment