(எம்.மனோசித்ரா)
நாட்டுக்கு தேவையான மூன்றாம் கட்ட தடுப்பூசி உள்ளிட்ட அனைத்து தடுப்பூசிகளும் முழுமையாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய அஸ்ட்ரசெனிகா, சைனோபார்ம், ஸ்புட்னிக், மொடர்னா மற்றும் பைசர் ஆகியவை உள்ளடங்களாக 85 இலட்சத்து 60000 தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இவற்றில் 6.8 மில்லியன் தடுப்பூசிகள் சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிடமிருந்தும் , உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்தும் அன்பளிப்பாக கிடைக்கப் பெற்றுள்ளன. எஞ்சியவற்றில் தலா ஒவ்வொரு தடுப்பூசிக்கும் 5 - 7.5 டொலர் செலவிடப்பட்டுள்ளது.
நாட்டுக்கு தேவையான தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் பொறுப்பு கடந்த ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டது.
மூன்றாம் கட்டமாக வழங்குவதற்கு தேவையான பைசர் தடுப்பூசி உள்ளிட்ட நாட்டுக்கு தேவையாளனவு முழுமையாக அனைத்து தடுப்பூசிகளும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் ஒரு வருடம் செலவிடப்பட்டுள்ளது.
அதற்கமைய இதுவரையில் 2,865,424 அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளும், 1,500,000 மொடர்னா தடுப்பூசிகளும், 195,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகளும், 26,000 000 சைனோபார் தடுப்பூசிகளும், 18,000,000 பைசர் தடுப்பூசிகளும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
ஸ்புட்னிக் தவிர்ந்த ஏனைய அனைத்து தடுப்பூசிகளும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகும். அது தவிர இவை அனைத்திற்கும் ஒளடத கட்டுப்பாட்டு அதிகாரசபையின் விசேட வைத்திய நிபுணர்களின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
இவற்றில் எந்தவொரு தடுப்பூசியின் காரணமாகவும் பாரதூரமான பக்க விளைவுகள் எவையும் ஏற்படவில்லை. பைசர் மற்றும் சைனோபார்ம் ஆகிய தடுப்பூசிகளே அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பைசர் தடுப்பூசி உலக வங்கியின் முழுமையான கடன் உதவியிலும், சைனோபார்ம் தடுப்பூசி ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடனும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
சிறப்பாக தடுப்பூசி வழங்கிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதல் 10 இடங்களுக்குள் தரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment