(எம்.மனோசித்ரா)
குருவிட்ட பொலிஸ் பிரிவில் கெந்தலந்த பிரதேசத்தில் மனைவியினால் கோடரியால் தாக்குதலுக்கு உள்ளான கணவன் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு கனவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது இவ்வாறு மனைவியால் தாக்குதலுக்கு உள்ளான கணவன் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (09) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் 34 வயதுடைய, கெந்தலந்த பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
குறித்த நபர் தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வருகை தருவதோடு, மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளதோடு, இவ்வாறான சந்தர்ப்பங்களில் மனைவியும் அவரது குழந்தைகள் இருவரும் அயலவர்களின் வீடுகளிலேயே தஞ்சமடைந்துள்ளனர்.
அதேபோன்று சம்பவம் இடம்பெற்ற தினத்தன்றும் மதுபோதையில் வீட்டிற்கு வந்த கணவர் கூரிய ஆயுதம் மற்றும் அசிட் போத்தல் என்பவற்றைக் காண்பித்து மனைவியை கொல்லப்போவதாக அச்சுறுத்தியுள்ளார். இதன்போதே குறித்த நபரின் மனைவி அவரை கோடரியால் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் 31 வயதுடைய அதே பிரதேசத்தைச் சேர்ந்த பெண், அவரது கணவனை தாக்க பயன்படுத்திய கோடரியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment