பொருளாதார ரீதியிலான சுதந்திரத்தை அடைந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர் : அரசாங்கம் எமது நாட்டின் நன்மதிப்பை முழுமையாகச் சீர்குலைத்துள்ளது - கயந்த கருணாதிலக - News View

About Us

About Us

Breaking

Monday, January 31, 2022

பொருளாதார ரீதியிலான சுதந்திரத்தை அடைந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர் : அரசாங்கம் எமது நாட்டின் நன்மதிப்பை முழுமையாகச் சீர்குலைத்துள்ளது - கயந்த கருணாதிலக

(நா.தனுஜா)

சுதந்திர தினத்தை மிகுந்த கௌரவத்துடன் கொண்டாட வேண்டிய தருணத்தில், எமது நாடு அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குக்கூட கடன்களைக் கோரும் அளவிற்கு மிக மோசமான நிலையிலிருக்கின்றது. 74 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கான தயார்ப்படுத்தல்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தற்போதைய சூழ்நிலையில், பொருளாதார ரீதியிலான சுதந்திரத்தை அடைந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை மக்கள் உணர ஆரம்பித்திருக்கின்றார்கள். எனவே அனைத்து வழிகளிலும் தோல்விகண்டுள்ள அரசாங்கத்தை ஆட்சிபீடத்திலிருந்து விரட்டியடித்து, மக்களின் பிரச்சினைகளுக்கு உரியவாறான தீர்வினைப் பெற்றுக் கொடுக்கின்ற அரசாங்கமொன்றைத் தெரிவு செய்ய வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டிருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (31) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, தற்போதைய அரசாங்கத்தின் தூரநோக்கற்ற, தன்னிச்சையான தீர்மானங்களினால் நாட்டு மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் மொத்தத் தொழிற்படையில் 25 சதவீதமானோர் விவசாயத்துறையுடன் தொடர்புபட்டவர்களாக இருக்கின்றனர்.

நாடளாவிய ரீதியில் சுமார் 18 இலட்சம் குடும்பங்கள் நெல் விவசாயத்திலும் சுமார் 22 இலட்சம் குடும்பங்கள் ஏனைய பயிர்ச் செய்கை நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றன.

அண்மைய காலங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் கூறுகின்றார். இழப்பீடு வழங்குவதாகக் கூறுவதிலிருந்தே தவறு இடம்பெற்றிருப்பது தெளிவாகின்றது.

ஆனால் விவசாயிகளுக்கு இழப்பீட்டை வழங்குவதன் ஊடாக மாத்திரம் அரசாங்கம் அதன் தவறை நிவர்த்தி செய்துகொள்ள முடியாது. மாறாக இடம்பெற்ற தவறுக்கு அரசாங்கம் முழுமையாகப் பொறுப்பேற்றுக் கொள்வதுடன் அதனை முழுமையாக சீர் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு இரு போகங்களுக்குமான உர நிவாரணத்தை வழங்குவதற்கு 30,000 மில்லியன் ரூபா தேவையென மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் தற்போது விவசாயிகளுக்கான இழப்பீட்டை வழங்குவதற்கென 40,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்வதற்கு அந்த நிதி போதுமானதல்ல.

அதுமாத்திரமன்றி விளைச்சலில் ஏற்பட்ட வீழ்ச்சியை உரியவாறு சரியாக மதிப்பீடு செய்வதற்கான வழிமுறைகள் எதனையும் அரசாங்கம் தற்போதுவரை முன்வைக்கவில்லை.

அதேபோன்று பெரும்போக நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பிற்கான நட்டஈட்டை மாத்திரமே வழங்கப்போவதாகவும் அரசாங்கம் கூறுகின்றது. அவ்வாறெனில், பாரம்பரியமாக ஏனைய பயிர்ச் செய்கை உற்பத்திகளில் ஈடுபட்டுவரும் விவசாயிகளின் நிலையென்ன?

எமது நாட்டிற்குப் பெருமளவான அந்நியச் செலாவணி வருமானத்தைப் பெற்றுத்தருகின்ற தேயிலை சிறு தோட்ட உரிமையாளர்கள் சுமார் 4 இலட்சம் பேர் இருக்கின்றார்கள். இரசாயன உர இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தினால் தேயிலை விளைச்சல் குறைவடைந்து, அவர்கள் பெருமளவு வருமானத்தை இழந்திருக்கும் நிலையில் அவர்களுக்கு அரசாங்கம் வழங்கப்போகின்ற தீர்வு என்ன?

விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை உரிய காலத்தில் பெற்றுக் கொடுத்திருந்தால், தற்போது ஏற்பட்டிருக்கக்கூடிய நெருக்கடிகளைத் தவிர்த்திருக்க முடியும். ஆனால் அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களின் விளைவாக, பல வருட காலமாக அரிசி உற்பத்தியில் தன்னிறைவடைந்திருந்த எமது நாடு, இப்போது அரிசி வழங்குமாறு சீனாவிடம் கோர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தற்போது 74 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு அரசாங்கம் தயாராகி வருகின்றது. சுதந்திரதினத்தை மிகுந்த கௌரவத்துடன் கொண்டாட வேண்டிய தருணத்தில், எமது நாடு அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குக்கூட கடன்களைக் கோரும் அளவிற்கு மிக மோசமான நிலையிலிருக்கின்றது. தற்போதைய அரசாங்கம் எமது நாட்டின் நன்மதிப்பை முழுமையாகச் சீர்குலைத்திருக்கின்றது.

ஆகவே 74 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கான தயார்ப்படுத்தல்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், நாட்டு மக்கள் மத்தியில் பொருளாதார ரீதியான சுதந்திரத்திற்கான தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது.

சட்டவிரோத செயற்பாடுகளிலிருந்தும் ஊழல் மோசடிகளிலிருந்தும் செயற்திறனற்ற தன்மையிலிருந்தும் ஏமாற்றப்படுவதிலிருந்தும் மக்கள் சுதந்திரமடைய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது.

எனவே அனைத்து வழிகளிலும் தோல்வி கண்டுள்ள தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிபீடத்திலிருந்து விரட்டியடித்து, மக்களின் பிரச்சினைகளுக்கு உரியவாறான தீர்வினைப் பெற்றுக் கொடுக்கின்ற அரசாங்கமொன்றைத் தெரிவு செய்ய வேண்டியது இன்றியமையாததாகும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment