(நா.தனுஜா)
இலங்கையின் பொருளாதார நிலைவரம் மிகவும் மோசமடைந்து வருவதாகவும் மருந்துப் பொருட்கள், உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளக் கூடிய கனேடியப் பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் எச்சரித்திருக்கின்றது.
சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் ஒவ்வொன்றும் தமது நாட்டின் பிரஜைகள் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளும்போது விசேடமாகக் கவனம் செலுத்த வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய பயண வழிகாட்டல்களை வெளியிடுவது வழமையாகும்.
அந்த வகையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளக் கூடிய தனது நாட்டின் பிரஜைகளை எச்சரிக்கும் வகையில் கனேடிய அரசாங்கத்தினால் அதன் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பயண வழிகாட்டலிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவ்வழிகாட்டலில் கொவிட்-19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் மற்றும் பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதேவேளை, நாட்டின் பொருளாதார நிலைவரம் பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் பொருள் கொள்வனவு நிலையங்கள், எரிவாயு நிரப்பு நிலையங்கள், மருந்தகங்களுக்கு முன்னால் நீண்ட வரிசைகள் காணப்படலாம் என்றும் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் மேலதிக விபரங்களை அறிந்துகொள்வதற்காக இலங்கையின் ஊடக செய்திகளைப் பார்வையிடுமாறும் கனேடிய அரசாங்கம் வெளியிட்டுள்ள பயண வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment