அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுதலையானார் அசாத் சாலி - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 1, 2021

அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுதலையானார் அசாத் சாலி

கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று (02) எடுத்துக் கொள்ளப்பட்டபோது, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இத்தீர்ப்பை வழங்கினார்.

தீர்ப்பை அறிவித்த நீதிபதி, இனங்கள் அல்லது மதங்களின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், மக்கள் மத்தியில் கோபத்தை தூண்டும் வகையிலும் இதுபோன்ற கருத்துகளை பிரதிவாதி கூறியதாக முறைப்பாட்டாளர்களால் நிரூபிக்க தவறியமை காரணமாக, பிரதிவாதியாக நிரபராதியென விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

கடந்த மார்ச் 09ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தின் ஊடாக, இனங்களுக்கு இடையில் பகைமையை தூண்டியதாகவும், பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்தை மீறியதாகவும் தெரிவித்து, இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் அவர், கடந்த மார்ச் 16ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்படி, அவர் மீதான குற்றச்சாட்டை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரச தரப்பு தவறியதால், குற்றவாளியை அனைத்து குற்றச்சாட்டுகளிலும் இருந்து விடுவிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில், கொழும்பு மேல் நீதிமன்ற அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஊடக சந்திப்பொன்றினை நடத்தி மத, இன பேதங்களை தோற்றுவிக்கும், வன்மத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறி 1988 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1982 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க சட்டங்களால் திருத்தப்பட்ட 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) ஏ பிரிவுடன் இணைத்து பர்க்க வேண்டிய 2 (2) (ஈ) அத்தியாயத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை அசாத் சாலி புரிந்துள்ளதாக முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இதே சம்பவம் காரணமாக 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் (ஐ.சி.சி.பி.ஆர்.) 3 (1) ஆம் உறுப்புரையுடன் இணைத்து பர்க்க வேண்டிய 3 (3) ஆம் உறுப்புரையின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை அசாத் சாலி புரிந்துள்ளதாக அவர் மீது முன் வைக்கப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment