பாடசாலைகளில் சேவை மற்றும் வசதிக் கட்டணங்கள் அறவிடப்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 1, 2021

பாடசாலைகளில் சேவை மற்றும் வசதிக் கட்டணங்கள் அறவிடப்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

பாடசாலைகளில் மாணவர்களிடம் அறவிடப்படும் சேவை மற்றும் வசதிக் கட்டணங்கள் அறவிடப்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும். அது தொடர்பில் சுற்று நிருபம் ஒன்றை வெளியிடுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கல்வி அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் மீதான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாடு எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அதன் காரணமாக நாட்டில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு வரிசை யுகம் உருவாகி இருக்கின்றது. பால்மா, எரிவாயு என்று வரிசைகள் உருவாகின. ஆனால் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்களால் எரிவாயுவிற்கான வரிசை நின்றுள்ளது.

இவ்வாறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுமதிக்கும்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகின்றனர். அதாவது வசதி மற்றும் சேவைக் கட்டணம் என்று மாணவர்களிடம் பணம் அறவிடப்படுகின்றது.

அத்துடன் பொருளாதார வசதி உள்ளவர்கள் சுயமாகவே பாடசாலை அபிவிருத்திக்காக பணம் நன்கொடையாக வழங்குவார்களாக இருந்தால் அதில் பிரச்சினை இல்லை. அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சேவை மற்றும் வசதிக் கட்டணங்களுடன் வருமாறு பாடசாலைகள் அறிவுறுத்தி வருகின்றன.

சீ.டபிள்யூ.டபிள்யூ கண்ணங்கராவின் இலவச கல்வி தொடர்பில் கதைக்கின்றோம். ஆனால் அவரின் அந்த கல்வித் திட்டத்திற்கு அமையவா மாணவர்களிடம் பணம் அறவிடப்படுகின்றது என கேட்கின்றேன். அதனால் தயவுசெய்து இது தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக சேவை மற்றும் வசதிக் கட்டணங்கள் அறவிடப்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

அது தொடர்பான சுற்றுநிருபத்தை சகல கல்வி வலையங்களுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சு வெளியிட வேண்டும். அவ்வாறு செய்தால் தற்போதைய கல்வி அமைச்சர் வரலாற்றில் இடம்பிடிப்பார்.

ஏனெனில் மக்கள் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் இவ்வாறு பணம் அறவிடுவதை நிறுத்த வேண்டும்.

அத்துடன் இந்த நாட்டில் பெண்கள் தலைமுறை எதிர்கொள்ளும் நிலை மிகவும் வருத்தமளிக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

நாட்டில் உள்ள ஐம்பத்திரண்டு சதவீத பெண்களின் எதிர்காலத்தை பிரகாசமாக்க வேண்டுமானால் அதற்கான முறையான, உறுதியான மற்றும் நிலைபேறான திட்டங்கள் அவசியமாகும். அதேபோன்று கொவிட் நிலைமையால் எமது நாட்டில் மூன்று வருடங்களாக குழந்தைகளின் கல்வி வீழ்ச்சியடைந்துள்ளது. இதனை பாதுகாத்து, அந்த குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இதன்போது பதிலளித்த கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுகையில், பாடசாலைகளில் சேவை மற்றும் வசதிக் கட்டணங்கள் அறவிடுவது தொடர்பில் குறிப்பிட்டமைக்கு நன்றியை கூறிக் கொள்கின்றேன். இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment