சவுதி அரேபியாவில் 4 நாட்கள் நடந்த மின்னணு இசை நிகழ்ச்சியில் 7 லட்சத்து 32 ஆயிரம் பேர் திரண்டனர் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
சவுதி அரேபியா நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டது. இதையடுத்து அங்கு அதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சவுதி அரேபியாவில் மின்னணு இசை நிகழ்ச்சி 4 நாட்கள் நடைபெற்றது. இதில் உலகின் பிரபல இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.
இசை நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். 4 நாட்கள் நடந்த இந்த இசை நிகழ்ச்சியில் 7 லட்சத்து 32 ஆயிரம் பேர் திரண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்நாள் நிகழ்ச்சியில் 1 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து சவுதி பெண் ஒருவர் கூறும்போது, ‘‘இதுபோன்ற ஒரு கூட்டத்தை ரியாத்தில் நாங்கள் இதுவரை பார்த்தது இல்லை’’ என்றார்.
இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி மகிழ்ந்த அதே வேளையில் மத நம்பிக்கைகளையும் மதித்தனர். சிறிது நேரம் இசையை நிறுத்தி விட்டு இஸ்லாமிய முறைப்படி தொழுகை செய்தனர். அதன் பிறகு மீண்டும் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இது குறித்து அங்குள்ள ஊடகங்கள் கூறும்போது, ‘‘மின்னணு இசை விழா உட்பட நாட்டில் ஏற்படும் மாற்றங்களுக்கு பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் எடுக்கும் நடவடிக்கைகள்தான் காரணம் என்று தெரிவித்துள்ளன.
அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடையை நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக மேற்கத்திய நாடுகளில் ரேவ் பார்ட்டி மற்றும் இசை நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடத்தப்படும். சவுதி அரேபியாவில் முதல் முறையாக பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment