(எம்.பஹ்த் ஜுனைட்)
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சின் தேசிய திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தின் செயற்படுத்தலில் காத்தான்குடி நகரம் உட்பட ஏனைய பிரதேசங்களை கழிவுகளற்ற நகரமாக்கும் நோக்கத்தில் ரூபா. 1000 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இயந்திரவியல் சார் சேதனைப்பசளை உற்பத்தி நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வு பசுமை நகர திட்டத்தின் கீழ் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றது.
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் ரொசான் ரணசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
அத்துடன் சுபீட்சத்தின் நோக்கில் கட்டியெழுப்பப்படுகின்ற சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா அமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் வாவி ஓரத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா மற்றும் குட்வின் சதுக்கத்தில் அமைக்கப்பட்ட கொள்கலன் கடைத் தொகுதி ஆகியன மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.
மேலும் காத்தான்குடி நகர சபையினை மாநகர சபையாக தரம் உயர்ந்தக்கோரி நகர சபை தவிசாளரினால் இராஜாங்க அமைச்சரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன்,காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர்,ஏறாவூர் நகர சபை தவிசாளர் எம்.எஸ்.நளீம் , காத்தான்குடி நகரசபை செயலாளர் மற்றும் நகரசபை உறுப்பினர்கள், அதிகாரிகள், உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment