(எம்.எப்.எம்.பஸீர்)
கெரவலபிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 40 வீதமானவற்றை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் தாக்கல் செய்துள்ள சத்தியக் கடதாசிகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
குறித்த மூவர் சார்பிலும், ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா, அவர்கள் சார்பில் விடயங்களை முன் வைக்க தயாரான போது நேற்று (17) சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய ராஜரட்ணம் இந்த விடயத்தை முன் வைத்தார்.
நீதிமன்றத்தில் சத்தியக் கடதாசிகளை தாக்கல் செய்த அமைச்சர்கள் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியுள்ளதாக தெரிவித்தே இந்த ஆட்சேபனையை முன் வைத்தார்.
இந்நிலையில் கெரவலபிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளின் 40 வீதமானவற்றை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்க அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யபட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பிலான மேலதிக பரசீலனைகளை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை உயர்நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்தது.
குறித்த மனுக்கள் தொடர்பிலான பரிசீலனைகள் நேற்று (17) இரண்டாவது நாளாக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய நீதியரசர்களான புவனேக அளுவிகாரே,பிரியந்த ஜயவர்தன, விஜித மலல்கொட மற்றும் எல்.டி.பி தெஹிதெனிய ஆகியோர் அடங்கிய ஐவர் கொண்ட பூரண நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.
நேற்றையதினம் மனுமீதான பரிசீலனைகள் ஆரம்பிக்கப்பட்ட போது ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார முன்வைத்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை ஆதரித்து அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி திஸத் விஜயகுணவர்தன வாதங்களை முன்வைத்தார். மனுவுடன் தொடர்புடைய ஒப்பந்தம் ஊடாக தேசிய வலுசக்தி கொள்கை மீறப்பட்டுள்ளதாக அவர் தனது வாதத்தின் ஊடாக குற்றஞ்சுமத்தினார்.
'கனம் நீதியரசர்களே ! இந்த ஒப்பந்தம் 2020 ஆம் ஆண்டு அரசு தயாரித்த இயற்கை எரிவாயு தொடர்பிலான தேசிய கொள்கைக்கு முரணானதாகும். அந்த கொள்கைக்கமைய எரிவாயு தொடர்பிலான ஒப்பந்தம் தூரநோக்குடன் கூடியதாக அமைய வேண்டும் என்பதுடன் உரிய விலைமனு நடவடிக்கைகளுக்கு அமையவும் இடம்பெற வேண்டும். எனினும் இந்த ஒப்பந்தம் உரிய விலைமனு நடைமுறைகளை பின்பற்றாது கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சரவைக்குகூட போதிய தெளிவில்லை.
இந்த பங்கு உரிமை கைமாற்றத்திற்கு முன்னர் அரசு அவற்றின் பெறுமதி தொடர்பில் உரிய பெறுமதி மதிப்பீடுகளை முன்னெடுக்கவில்லை. அமைச்சரவையும் அது தொடர்பில் உரிய அவதானத்தை செலுத்தவில்லை. அமைச்சரவை இந்த ஒப்பந்தம் தொடர்பில் சரியாக எதனையும் அறியாமலேயே தீர்மானத்திற்கு வந்துள்ளது. அதனூடாக இந்நாட்டு மக்களுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. அமைச்சரவை எப்போதும் மக்கள் சார்பானதாக செயற்பட வேண்டும்.
எனினும் இந்த கொடுக்கல் வாங்கலின் போது அமைச்சரவை அந்த பொறுப்பை மீறி செயற்பட்டுள்ளது. அமைச்சரவை எப்போதும் பொதுமக்கள் நலனுக்காக செயற்பட வேண்டுமேயன்றி பிறிதொருவரின் நலனுக்காக செயற்படக்கூடாது.
இந்த ஒப்பந்தம் ஊடாக எரிவாயு விநியோகத்தின் தனியுரிமையை ஐந்து வருடங்களுக்கு அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது பிரச்சினைக்குரியது. விலைமனுகோரல் நடைமுறைகள் பின்பற்றப்படாமல் நாட்டின் எரிவாயு விநியோகத்தின் தனியுரிமையை அமெரிக்க நிறுவனத்திற்கு கையளிக்க அமைச்சரவை எடுத்த முடிவு சட்டத்திற்கு முரணானது.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியாகும் வரை அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்க விடயங்களை வெளிப்படுத்தாமலிருக்க இலங்கை அரசாங்கமும், பிரதிவாதி அமெரிக்க நிறுவனமும் உடன்பாட்டுக்கு வந்துள்ளன. இது மிக பயங்கரமான நிலைமை. இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்க விடயங்களை மறைக்க முடியாது. அவை தொடர்பில் பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
பாராளுமன்றம் அதனை அறிய வேண்டும். இந்த ஒப்பந்தம் ஊடாக குறித்த அமெரிக்க நிறுவனத்திற்கு பாரிய வரிச் சலுகைகளை வழங்க அரசு இணங்கியுள்ளது. இதனூடாக பொதுமக்களின் வரிப்பணம் பாரியளவில் விரயமாகும்.
இந்த ஒப்பந்திற்கு அமைச்சரவை அனுமதியளிக்கவில்லை என மூன்று அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். அமைச்சரவையின் செயலாளர் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள கடிதமொன்றில் 'இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதாக கருதி செயற்படுமாறு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படுகிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சரவை செயலாளரின் இந்த அறிவித்தல் ஊடாக குறித்த ஒப்பந்தம் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டதாக அல்லது அவ்வொப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியதாக எந்த உறுதியான விடயங்களும் குறிப்பிடப்படவில்லை. அதனால் இந்த ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை உண்மையிலேயே அனுமதி வழங்கியதா? அது தொடர்பிலான விடயங்கள் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டதா ? என்பது தொடர்பில் நியாயமான சந்தேகம் எழுகிறது' என குறிப்பிட்டார்.
இதனையடுத்து அனைத்து நிறுவன சேவைகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க உள்ளிட்ட மின்சக்தி தொழிற்சங்கங்களுக்காக மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும விடயங்களை முன்வைத்தார். அரசாங்கம் தேசிய வலுசக்தி கொள்கைகளை மீறி இந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும சுட்டிக்காட்டினார்.
'கனம் நீதியரசர்களே ! வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில எரிவாயு விநியோகத்தின் தனியுரிமையை அமெரிக்க நிறுவனமொன்றிற்கு வழங்குவது மிக பாரதூரமானது என கருத்து வெளியிட்டிருந்தார். அதனூடாக இலாபமான விலைகளின் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாமல் போவதாகவும் அமைச்சர் கம்மன்பில குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல் யுகதனவி பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிற்கு கைமாற்றுவது தொடர்பாக ஆராய்வதற்க நிதியமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுக்களுக்கு வலுசக்தி அமைச்சின் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்படவில்லை எனவும் அவர் தனது அவதானிப்புக்களை வெளிப்படுத்தியிருந்தார்.
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் இந்த ஒப்பந்தம் அமைச்சரவையினால் அங்கிகரிக்கப்பட்டதல்ல என கருத்து வெளியிட்டுள்ளார். அவ்வாறாயின் இந்த ஒப்பந்தம் அமைச்சரவையில் அங்கிகரிக்கப்பட்டது அல்லது அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது என அமைச்சரவை செயலாளர் நீதிமன்றில் முன்வைத்துள்ள விடயங்கள் பொய்யானதா? என சந்தேகம் எழுகிறது.
அமைச்சர் விமல் வீரவன்சவும் இந்த ஒப்பந்தம் மக்களாணையை மீறியது என குறிப்பிட்டுள்ளார்' என சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும குறிப்பிட்டார்.
அதன் பின்னர் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளவர்களில் உள்ளடங்கும் அமைச்சரவை அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில,வாசுதேவ நாணயக்கார ஆகியோர் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உதித இகலஹேவா மன்றில் விடயங்களை முன்வைக்க தயாரானார்.
இதன்போது குறுக்கீடு செய்த சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரட்னம் இந்த மூன்று அமைச்சர்களும் உயர் நீதிமன்றிற்கு முன்வைத்துள்ள சத்தியக் கடதாசிகள் தொடர்பில் ஆட்சேபனைகளை முன்வைத்தார்.
'கனம் நீதியரசர்களே ! இந்த மூன்று அமைச்சர்களும் முன்வைத்துள்ள சத்திய கடதாசிகள் அரசியலமைப்பிற்கு முரணானதாகும். அரசியலமைப்பின் பிரகாரம் இவர்கள் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை பாதுகாப்பது தொடர்பில் பிணைந்துள்ளனர்.
அரசியலமைப்பை பாதுகாப்பதாக சத்தியப் பிரமாணம் செய்திருக்கும் இந்த அமைச்சர்கள் அரசியலமைப்பை மீறி இந்த சத்தியக் கடதாசிகளை முன்வைத்துள்ளனர்' என சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்னம் குறிப்பிட்டார்.
இதன்போது இந்த ஆட்சேபனைகளை உங்களுக்கான வாதங்களை முன்வைக்க சந்தர்ப்பத்தில் முன்வைக்க முடியும் என நீதியரசர்கள் குழாம் சட்டமா அதிபருக்கு அறிவித்தது.
அதன் பின்னர் அமைச்சர்களான விமல், வாசு, கம்மன்பில சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி உதித இகலஹேவா தனது தரப்பு விடயங்களை மன்றில் முன்வைக்க நீதியரசர்கள் குழாம் அனுமதித்தது.
இதனையடுத்து மன்றில் விடயங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி உதித இகலஹேவா தனது சேவை பெறுநர்களான இந்த மூன்று அமைச்சர்களும் ஆரம்பத்தில் இந்த ஒப்பந்தம் தொடர்பில் திறந்த வெளியில் கருத்து வெளியிடுவதில் இருந்து தவிர்ந்திருந்ததாக தெரிவித்தார்.
எனினும் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் பிரசித்தமாக உண்மை நிலைமையை சமூகத்திற்கு தெளிவுப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த ஒப்பந்த்துடன் தொடர்புடைய அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்படவில்லை என தனது சேவைபெறுநர்களான அமைச்சர்கள் குறிப்பிடுவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி உதித இகலஹேவா குறிப்பிட்டார்.
' கனம் நீதியரசர்களே ! கடந்த செப்டெம்பர் மாதம் 06ஆம் திகதி அமைச்சரவை கூட்டம் வீடியோ தொழினுட்ப முறைமை ஊடாகவே இடம்பெற்றது. அந்த கூட்டத்தில் இந்த ஒப்பந்தத்துடன் தொடர்புடைய அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவில்லை. அவ்வாறானதொரு அமைச்சரவை பத்திரத்தை எனது சேவை பெறுநர்கள் மூவரும் காணவே இல்லை.அதன் பிரதிகள் கூட வழங்கப்பட்டிருக்கவில்லை. அக்கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் தொடர்பில் எந்த இறுதி முடிவுகளும் எடுக்கப்படவுமில்லை.
நிறைவேற்றப்படாத அல்லது அனுமதியளிக்கப்படாத இந்த அமைச்சரவை யோசனை தொடர்பாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கலந்துரையாடல் ஒன்றினை நிதியமைச்சரிடம் கோரியிருந்தார்.
அமைச்சரவை கூட்டுப் பொறுப்பை மீறி உயர் நீதிமன்றில் சத்தியக் கடதாசிகளை முன்வைத்தமை தொடர்பில் எனது சேவைபெறுநர்களை அமைச்சரவையில் இருந்து நீக்க ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் நேற்று (நேற்று முன்தினம் 16) இந்த நீதிமன்றில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
எனது சேவை பெறுநர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்தே அரசாங்கத்துடன் தொடர்புப்பட்டுள்ளனர். அக்கட்சிகள் இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள உடன்பாடுகளுக்கு அமைய அமைச்சு பதவிகளில் இருந்து அவர்களை நினைத்தவாறு நீக்க முடியாது' என ஜனாதிபதி சட்டத்தரணி உதித இகலஹேவா குறிப்பிட்டார்.
அதன் பின்னர் ஜனாதிபதி சட்டத்தரணி உதித இகலஹேவாவின் மேலதிக வாதங்களை அடுத்த தவணை வரை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம் இம்மனுக்கள் மீதான பரிசீலனைகளை எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை ஒத்திவைத்தது. ஜனவரி 10,12 மற்றும் 13ஆம் திகதிகளில் இம்மனுக்கள் மீதான பரிசீலனைகள் இடம்பெறும்.
No comments:
Post a Comment