பிரதான எதிர்க்கட்சியுடன் இணைந்து தமிழர் தரப்பும் பாராளுமன்றத்தை புறக்கணிக்கும் என நாம் நினைத்தோம், ஆனால் உங்கள் மக்களின் பிரச்சினைகளை கலந்துரையாட நீங்கள் தயாராக இருந்தாலும் சஜித் பிரேமதாச உங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே அவர்களின் செயற்பாடுகள் மூலமாக வெளிப்பட்டுள்ளது. எனினும் தமிழ் மக்களுக்காக கூட்டமைப்பு போராடுவதை நாம் வரவேற்கின்றோம் என அமைச்சர் சி.பி ரத்நாயக்க சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சுற்றாடல் அமைச்சு, வன ஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு, மற்றும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு யானைவேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல், உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மீள் காடாக்கம் , வனவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் மீதான கருத்தை முன் வைக்கையிலேயே அவர் இதனை கூறினார்.
ஏனைய நாடுகளை போன்றே இலங்கையிலும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. எம்மை இந்தியாவுடன் ஒப்பிட முடியாது. இது சிறிய நாடு, இந்த நாட்டுக்குள்தான் நாம் எமது சகல செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மூன்று தசாப்தகால யுத்தமே பிரதானமாக காரணம். இந்த யுத்தத்தில் வடக்கு கிழக்கை சேர்ந்த பலர் இடம்பெயர்ந்திருந்தனர். நாட்டை விட்டு வெளியேறினர், தமது வாழ்கையை பாதுகாத்துக்கொள்ள மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். அதனை உருவாக்கிய சிலர் இன்று பாராளுமன்றத்திற்கு வந்து வேறு பல கதைகளை கூறுகின்றனர்.
வேறு இராஜ்ஜியம் உருவாக்குவதோ அல்லது அதற்கு சர்வதேசத்திற்கு துணைபோவது ஒரு பக்கம் இருக்கட்டும், நாட்டு மக்கள் இன மத பேதமின்றி வாழக்கூடிய சூழலை நாம் உருவாக்க வேண்டும்.
மூன்று தசாப்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறிய தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்கும் தேசிய வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும். அதற்கு சகலரதும் ஒத்துழைப்பு அவசியம்.
பிரதான எதிர்க்கட்சியுடன் இணைந்து தமிழர் தரப்பும் பாராளுமன்றத்தை புறக்கணிக்கும் என நாம் நினைத்தோம், ஆனால் உங்கள் மக்களின் பிரச்சினைகளை கலந்துரையாட நீங்கள் தயாராக இருந்தாலும் சஜித் பிரேமதாச உங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே அவர்களின் செயற்பாடுகள் மூலமாக வெளிப்பட்டுள்ளது.
இதனை மாற்றி சகலருக்கும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தமிழ் மக்களுக்காக நீங்கள் சபையில் குரல் எழுப்புவதை நாம் முழுமையாக ஆதரிக்கின்றோம். தீர்வுகளை பெற்றுக் கொடுக்க சகல நடவடிக்கையும் எடுப்போம்.
ஐந்து ஆண்டுகள் கால அவகாசத்தில் நாம் சகல பிரச்சினைகளையும் தீர்க்கவே நினைக்கின்றோம். எமக்கும் கால அவகாசம் தாருங்கள். நாட்டில் சகல தரப்பினருக்கும் ஒரே விதமாக சட்டம் செயற்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகும் என்றார்.
No comments:
Post a Comment