முல்லைத்தீவு, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறில் கடந்த சனிக்கிழமை (18) அன்று பாழடைந்த வளவின் பற்றைக் காணிக்குள் சடலமாக மீட்கப்பட்ட 13 வயதுச் சிறுமி பிறப்பு உறுப்பில் ஏற்பட்ட காயம் அல்லது கருக்கலைப்புக்கு உட்படுத்தப்பட்டு இரத்த போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்று சட்ட மருத்துவ வல்லுநர் அறிக்கையிட்டுள்ளார்.
13 வயதுடைய சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். தனது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலுள்ள சகோதரியின் வீட்டிற்கு கடந்த 15 ஆம் திகதி காலை சென்ற சிறுமி மாலை வரை வீடு திரும்பாதமையால் காணாமல் போயுள்ளதாக இவரது தாயாரால் கடந்த 15 ஆம் திகதி மாலை 2 மணிக்கு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸாரும் இராணுவத்தினரும் தீவிர தேடுதலை மேற்கொண்டதுடன் கிராம மக்களும் குறித்த சிறுமியை தேடி வந்தனர். ஆனால் கண்டுபிடிக்கப்படவில்லை
எனினும், சிறுமி இறுதியாக சென்ற சகோதரியின் வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில், கைவிடப்பட்ட காணியொன்றிலிருந்து கடந்த சனிக்கிழமை (18) குறித்த சிறுமியின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டது.
வலது கை அற்ற நிலையில் மீட்கப்பட்ட சடலம் மீதான பிரேத பரிசோதனைக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் ரி. பரஞ்சோதி முன்னிலையில் கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவின் விசாரணையோடு சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.
சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் சடலம் மீதான பரிசோதனைகள் இடம்பெற்றன.
குறித்த பரிசோதனையில் சிறுமியின் பிறப்புறுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது என்று சட்ட மருத்துவ வல்லுநர் சட்ட மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
அத்தோடு சடலம் மீதான பரிசோதனையில் சிறுமி 2 மாத கருவுற்றிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சிறுமியின் வலது கையை நாய் கடித்து துண்டித்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிறுமி உயிரிழந்து 3 தொடக்கம் 4 நாட்களாகியிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டாரா? கருக்கலைப்புக்கு உட்படுத்தப்பட்டாரா? சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டாரா? போன்ற கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர் ஒருவர் நேற்று முன்தினம் (18) கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு சிறுமியின் பெற்றோரும் விசாரணைக்காக நேற்றையதினம் (19) பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்புப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மாங்குளம் குறூப் நிருபர், புதுக்குடியிருப்பு விசேட நிருபர்
No comments:
Post a Comment