இலங்கை 'கடனை மீளச் செலுத்த முடியாத' நிலைக்குத் தள்ளப்படுவதற்கான அனைத்து சாத்தியப்பாடுகளும் காணப்படுகின்றன - பேராசிரியர் சாந்த தேவராஜன் - News View

About Us

About Us

Breaking

Friday, December 31, 2021

இலங்கை 'கடனை மீளச் செலுத்த முடியாத' நிலைக்குத் தள்ளப்படுவதற்கான அனைத்து சாத்தியப்பாடுகளும் காணப்படுகின்றன - பேராசிரியர் சாந்த தேவராஜன்

(நா.தனுஜா)

அண்மையில் கடன் மீள் செலுத்துகை ஆற்றலின் அடிப்படையில் ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனத்தினால் இலங்கை தரமிறக்கம் செய்யப்பட்டமை, தற்போது இலங்கையின் வசமுள்ள வெளிநாட்டுக் கையிருப்பு மற்றும் எதிர்வரும் ஆண்டில் செலுத்த வேண்டியுள்ள கடன்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், நாடு 'கடனை மீளச் செலுத்த முடியாத' நிலைக்குத் தள்ளப்படுவதற்கான அனைத்து சாத்தியப்பாடுகளும் காணப்படுவதாக தெற்காசியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கப் பிராந்தியங்களுக்கான உலக வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பொருளியலாளர் சாந்த தேவராஜன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி 'கடனை மீளச் செலுத்த முடியாத' நிலைக்குத் தள்ளப்பட்ட லெபனான் அதன் பின்னர் எதிர்கொண்ட விளைவுகள் தொடர்பில் விபரித்துள்ள தேவராஜன், இலங்கையும் லெபனானும் ஒன்றல்ல என்றாலும் இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒற்றுமைகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆகவே எத்தகைய விலையைச் செலுத்தியேனும் கடன்களை மீளச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுவதை இலங்கை தவிர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலக வங்கியின் முன்னாள் பதில் சிரேஷ்ட பொருளியலாளராகவும் அபிவிருத்திப் பொருளாதாரத்தின் சிரேஷ்ட பணிப்பாளராகவும் பல்வேறு பிராந்தியங்களிலும் உலக வங்கியின் சிரேஷ்ட பொருளியலாளராகவும் பணியாற்றிய பேராசிரியர் சாந்த தேவராஜன் 'பார்த்ஃபைன்டர்' அமைப்பின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கையின் பொருளாதார நிலை குறித்து எழுதியிருக்கும் கட்டுரையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

அக்கட்டுரையில் அவரால் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் முக்கிய விடயங்கள் வருமாறு, கடன் மீளச் செலுத்துகை ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு கடந்த 17 ஆம் திகதி ஃபிட்ச் தரப்படுத்தல் முகவர் நிலையத்தினால் இலங்கை 'சிசி' நிலைக்குத் தரமிறக்கப்பட்டுள்ளது. இது 'கடனை மீளச் செலுத்த முடியாது' (தாப்பிழை) என்பதைக் குறிக்கின்ற 'சி' தரத்திற்கு முன்னரான நிலையாகும்.

தற்போது காணப்படும் (மத்திய வங்கியின் அறிவிப்பிற்கு முன்னர்) 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கையிருப்பு மற்றும் எதிர்வரும் ஜனவரி மாதம் மீளச் செலுத்த வேண்டியுள்ள ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், நாடு 'கடனை மீளச் செலுத்த முடியாத' நிலைக்குத் தள்ளப்படுவதற்கான அனைத்து சாத்தியப்பாடுகளும் காணப்படுகின்றன. இது நடந்தால் நாட்டினதும் மக்களினதும் நிலை என்னவாகும்?

அண்மைய காலத்தில் கடனை மீளச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட நாடுகளின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஓரளவிற்கு இது குறித்த தெளிவைப் பெற்றுக் கொள்ள முடியும்.

கடந்த 2020 ஆம் ஆண்டு வழமைக்கு மாறாக பல்வேறு நாடுகள் அவற்றின் கடன்களை மீளச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டமையை அவதானிக்க முடிந்தது.

அந்த நாடுகளின் பட்டியலில் மதம் சார்ந்து தெளிவான வரையறைகளைக் கொண்ட, சிவில் யுத்த வரலாற்றைக் கொண்டு, சுற்றுலாத் துறையிலும் வெளிநாட்டில் பணி புரிவோரால் அனுப்பப்படும் பணத்திலும் பொருளாதாரம் பெருமளவில் தங்கியிருக்கின்ற லெபனானும் ஒன்றாகும். இலங்கை கடனை மீளச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படும் பட்சத்தில் என்ன நேரும் என்பதை அந்நாட்டின் அனுபவங்கள் மூலம் விளங்கிக் கொள்ள முடியும்.

நாடொன்று தான் பெற்றுக் கொண்ட கடன்களுக்கான வட்டி மீள் செலுத்துகை உள்ளிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தவறும்போது, அந்நாடு கடனை மீளச் செலுத்த முடியாத முறிவடைந்த நிலையை அடைந்திருப்பதாகக் கொள்ளப்படும்.

அந்த வகையில் லெபனான் உள்ளடங்கலாக கடனை மீளச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட பெரும்பாலான நாடுகள், முதலில் எதிர்கொண்ட விளைவு வெளிநாடுகளிடமிருந்து கொள்வனவில் ஈடுபட முடியாதமையேயாகும்.

குறிப்பாக இதன்போது அந்நாட்டினால் (லெபனான்) அதன் நடைமுறைக் கணக்கிலிருந்து கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபட முடியாத நிலையேற்பட்டது. இது இறக்குமதியில் எத்தகைய வீழ்ச்சியை (சுமார் 40 சதவீதம்) ஏற்படுத்தியது என்பதையும் அதனால் பொருளாதாரத்தின் இயங்குகையில் ஏற்பட்ட பாதிப்பையும் அண்மையில் உலக வங்கியினால் வெளியிடப்பட்ட ஆவணங்களின் ஊடாகப் புரிந்துகொள்ள முடியும்.

கடனை மீளச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட லெபனானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு வருடத்திற்குள் 20 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. அதேபோன்று நாணய மாற்றுப் பெறுமதி 129 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்தது. கடந்த 2020 ஜனவரியில் 10 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் 2021 மார்ச் மாதம் 158 சதவீதத்தை எட்டியது.

பொருளாதார மந்த நிலையும் பணவீக்க அதிகரிப்பும் வறிய மற்றும் சாதாரண மக்கள் மத்தியில் மிக மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும். 2020 இல் உணவுப் பண வீக்கம் 254 சதவீதமாகப் பதிவான நிலையில், உணவுப் பொருள் நுகர்விற்காக மக்கள் அவர்களது வருமானத்தில் பெருந்தொகையைச் செலவிட வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். உணவுப் பொருட்கள், எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக அவர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

2020 ஆம் ஆண்டின் முடிவில் நடாத்தப்பட்ட ஆய்வொன்றில் அந்நாட்டில் சுமார் 40 சதவீதமான குடும்பங்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ள முடியாத நிலையிலிருப்பது வெளிப்பட்டுள்ளது.

உற்பத்தி நிலையங்களைப் பொறுத்தமட்டில் ஐந்தில் ஒன்று முழுமையாக மூடப்பட்டிருப்பதுடன் ஏனையவை சராசரியாக 35 சதவீத இயலுமையுடன் மாத்திரமே இயங்குகின்றன.

லெபனானில் ஏற்கனவே உயர்வாகக் காணப்பட்ட வேலையின்மை, தற்போது 40 சதவீதமாக உயர்வடைந்திருக்கின்றது. இவற்றை விடவும் கவலைக்குரிய விடயம் எதுவென்றால், மிக மோசமான பொருளாதார நெருக்கடியானது வீதிகளில் வன்முறைகள் அரங்கேறுவதற்கு வழிவகுத்துள்ளது.

ஆனால் இலங்கை லெபனான் அல்ல என்பது நிச்சயமாகும். இருப்பினும் இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒற்றுமைகள் காணப்படும் நிலையில், இலங்கை கடன்களை மீளச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுவதை எவ்வாறேனும் தவிர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment