(எம்.மனோசித்ரா)
ஐரோப்பாவில் ஒமிக்ரோன் பரவல் தீவிரமாக அதிகரித்து வருகிறது. முதலிரு கட்ட தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்கள் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் இலங்கையில் தற்போதுள்ள நிலைமையை தக்க வைத்துக் கொள்ள முடியாது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதான விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐரோப்பாவில் ஒமிக்ரோன் பரவல் தீவிரமாக அதிகரித்து வருகிறது. அதன் காராணமாக மரணங்களின் எண்ணிக்கையும், தீவிர நிலைமையை அடையும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ஐரோப்பிய நாடுகளில் நிலவும் குளிர் காலநிலை, ஒமிக்ரோன் பரவும் வேகம் அதிகரித்துள்ளமை மற்றும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தில் காணப்படுகின்ற மந்த நிலைமை என்பன இதற்கான காரணமாகும்.
இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வைரஸாக தற்போது டெல்டா காணப்படுகிறது. எனவே நாட்டில் கொவிட் தொற்றினால் ஏற்படக் கூடிய அபாயம் இன்னும் குறைவடையவில்லை.
நாட்டில் நாளாந்தம் சுமார் 3500 தொற்றாளர்கள் பதிவாகிய நிலைமையும், நூற்றுக்கும் அதிக மரணங்கள் பதிவாகிய நிலைமையும் காணப்பட்டது. ஆனால் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் அந்த நிலைமைக் கடந்துள்ளோம். தற்போது எமக்குள்ள சவாலானது இதே நிலைமையைத் தக்க வைத்துக் கொள்வதாகும்.
தீர்க்கமானவொரு கால கட்டத்திலேயே நாம் தற்போது இருக்கின்றோம். பண்டிகைக் காலம் என்பதால் கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடும் போது தற்போது மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இவ்விடயத்தில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஒமிக்ரோன் பரவல் தீவிரமடைந்தால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே தற்போது காணப்படும் சவாலாகும். எனவே மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதே தற்போது இதற்குள்ள சிறந்த தீர்வாகும்.
நாட்டில் முழு சனத் தொகையில் 16.2 மில்லியன் பேர் 16 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இவர்கள் அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்பதே எமது இலக்காகும். அதற்கமைய இதுவரையில் 15.8 மில்லியன் பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 13.8 மில்லியன் பேருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு 85 சதவீதமானோருக்கு இரு கட்ட தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ள போதிலும், எதிர்வரும் சில மாதங்களில் பிரிதொரு சவாலை எதிர்கொள்ள நேரிடும். காரணம் இவ்வாறு தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளவர்களுக்கு சுமார் 6 மாதங்களின் பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடையத் தொடங்கும்.
எனவேதான் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானது என்பதை தொடர்ந்தும் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறில்லை எனில் தற்போதுள்ள நிலைமையே தொடர்ந்தும் காணப்படும் என்று கூற முடியாது.
நாட்டில் 2.7 மில்லியன் சனத் தொகை 60 வயதுக்கு மேற்பட்டோராவர். இவர்களில் 1.3 மில்லியன் பேர் மாத்திரமே மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர். அதே போன்று 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களும் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் அசமந்த போக்குடன் செயற்படுகின்றனர். இது சகலருக்கும் ஆபத்தை ஏற்படும் என்றார்.
No comments:
Post a Comment