பட்டதாரிகள் 51,000 பேருக்கும் அரச துறையில் நிரந்தர நியமனம் : ஜனவரி முதல் வழங்கப்படும் என்கிறார் அமைச்சர் தினேஷ் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 19, 2021

பட்டதாரிகள் 51,000 பேருக்கும் அரச துறையில் நிரந்தர நியமனம் : ஜனவரி முதல் வழங்கப்படும் என்கிறார் அமைச்சர் தினேஷ்

2022ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் 51,000 பட்டதாரிகளுக்கு அரசாங்கத் துறைகளில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

வேலைவாய்ப்பற்ற 51,000 பட்டதாரிகளுக்கு அரச துறையில் நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கைகள் 2022 ஜனவரி 03ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். 

அதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் தலைவரான கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இலவசக் கல்வியின் பிரதிபலனாக உயர் கல்வி நிறுவனங்களினூடாக உருவாக்கப்பட்டுள்ள இளைஞர் சமூகத்துக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கொள்கை பிரகடனத்துக்கமைய இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி தற்போது பயிற்சி பெற்று வரும் 51,000 பட்டதாரிகள் அரசாங்கத்தின் அபிவிருத்தி அதிகாரிகளாக 2022ஆம் ஆண்டு ஜனவரி மூன்றாம் திகதியில் குறிப்பிட்ட வேலைத் தளங்களில் இணைத்துக் கொள்ளப்படுவதுடன் அன்றைய தினமே அவர்களில் 42 ஆயிரத்து 500 பேரின் தொழில்கள் நிரந்தரமாக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை, 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பயிற்சிகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் ஒரு வருட காலத்தை நிறைவு செய்த பின்னர் 2022 ஏப்ரல் முதலாம் திகதி நிரந்தரமாக்கப்படவுள்ளனர். 

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நோக்கில் இந்த அமைச்சரவை பத்திரத்தை 2020 பெப்ரவரி மாதத்தில் சமர்ப்பித்துள்ளார்.

நமது நாடு மட்டுமன்றி முழு உலகமும் கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளதால் உலக நாடுகள் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. இவ்வாறான ஒரு சூழுநிலையிலேயே பட்டதாரிகள் 51,000 பேருக்கு அரசாங்கத் துறையில் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு ஜனாதிபதி முன்னுரிமை அளித்துள்ளார்.

அரசாங்கத்தின் இத்தகைய தீர்மானம், இளைஞர்களை பலப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் தூர நோக்கை முன்னெடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேற்படி திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment