திருகோணமலை - கண்டி பிரதான வீதி மங்குபிரிச் பகுதியில் ஆடைத் தொழிற்சாலைக்கு சொந்தமான தனியார் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 38 பேர் காயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து இன்று (07) முற்பகல் 6.45 மணியளவில் கப்பல் துறை சுதந்திர வர்த்தக வலயத்துக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் கோமரங்கடவல, மொரவெவ, கன்னியா பகுதியைச் சேர்ந்த 20 இற்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கப்பல் துறை பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றி வரும் இளைஞர் யுவதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பஸ் ஒன்று, இரண்டு பஸ்களை முந்திச் செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதன்போது குறித்த பஸ் வீதியோரத்தில் இருந்த மைல்கல் மற்றும் மின் கம்பம் ஆகியவற்றை மோதி வீழ்த்திச் சென்றுள்ளது.
பஸ்ஸின் சாரதி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்ரிஜன் பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருவதோடு, விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சீனக்குடா பொலிசார் தெரிவித்தனர்.
(அப்துல்சலாம் யாசீம், எம் எஸ். அப்துல் ஹலீம், ஹஸ்பர் ஏ ஹலீம், )
No comments:
Post a Comment