அமெரிக்க வல்லரசு நாடு கொரோனா தொற்றால் பெரும் பாதிப்புக்குள்ளானது. அங்கு இதுவரை அந்த தொற்றால் சுமார் 5 கோடியே 5 லட்சத்து 13 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்து 3,500 க்கும் மேற்பட்டோர் இறந்தும் உள்ளனர்.
தற்போது அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனாலும் அங்கு தடுப்பூசி போடுவதில் பொதுமக்களிடம் மட்டுமல்லாமல் படைவீரர்கள் மத்தியிலும் தயக்கம் காணப்படுகிறது.
அங்கு 20 ஆயிரம் படைவீரர்கள் தடுப்பூசி போட மறுத்து விட்டனர். அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிற அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த வகையில் அமெரிக்காவின் படைப்பிரிவில் ஒன்றான மரைன் கார்ப்ஸ் நவம்பர் 28ஆம் திகதிக்குள் பணியிலுள்ள துருப்புகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
100 க்கும் மேற்பட்ட மரைன் துருப்பினர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை மரைன் கார்ப்ஸ் படைப் பிரிவிலிருந்து வெளியான அறிக்கையில், இதுவரை 103 பேர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மரைன் பிரிவில் 95% பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 1,007 பேருக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ராணுவத்தில் இதுவரை ஆறு உயர் அதிகாரிகள் (அதில் இரு பட்டாலியன் கமாண்டர்களும் அடக்கம்) தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்ததால் பணியிலிருந்து விடுவிக்கபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று படைத் தளபதிகள் பல மாதங்களாக கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment