வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள விவசாயிகள் தமக்கான சேதன பசளையை சுயமாக உற்பத்தி செய்து பெரும்போக விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். எவரும் சேதனப் பசளைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடவில்லை. தெற்கிலுள்ள விவசாயிகள் தான் இரசாயன உரத்தை கோரி வீதிக்கிறங்கியுள்ளார்களென விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
பேராதெனிய பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பெரும்போகத்தில் எட்டு இலட்சம் ஹேக்டயார் நெற்செய்கை காணியின் 05இலட்ச ஹேக்டயார் காணியில் விவசாய நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இம்மாத இறுதிக்குள் விவசாயிகள் விவசாயத்தில் முழுமையாக ஈடுபடுவர். நெற்செய்கைக்கு தேவையான சேதன பசளை உரம் விவசாயிகளுக்கு தேவையான அளவு வழங்கப்படும். தெரிவு செய்யப்பட்ட பயிர்ச்செய்கைகளுக்கான கிருமிநாசினிகள் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
பெரும்பாலான பகுதிகளில் விவசாய நடவடிக்கைகள் வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள விவசாயிகள் சேதன பசளை உரத்தை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பிரதேச விவசாயிகள் தமக்கான உரத்தை சுயமாக உற்பத்தி செய்துக் கொண்டுள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எவ்வித போராட்டமும் கிடையாது.
தெற்கிலுள்ள விவசாயிகள் இரசாயன உரத்தை கோரி வீதிக்கிறங்கி போராடுகிறார்கள். உண்மையான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் சேதன பசளை திட்டத்திற்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
பொலன்னறுவை மாவட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் எத்தனை பேர் உண்மையான விவசாயிகள் என்பதை ஆராய வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு சாப்பிடுவதற்கு உணவு வழங்கப்பட்டுள்ளது .
ஆகவே, விவசாயிகள் அரசியல்வாதிகளின் குறுகிய நோக்கங்களுக்கு அகப்படாமல் சேதன பசளை திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment