எமது நாட்டுக்கு எதிராக சாட்சியங்களை தேடி, சர்வதேச நீதிமன்றங்களின் முன்னால் நிறுத்தும் மனித உரிமை கவுன்ஸிலின் முயற்சியை ஏற்க முடியாது என தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கைக்கு எதிராக மறைந்திருந்து முன்வைக்கப்பட்டுள்ள ஆதரமற்ற 120,000 சாட்சிகளை இறைமையுள்ள நாட்டுக்கு எதிராக பயன்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.
நேற்று பாராளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாம் எந்த நாட்டின் முன்பாகவும் மண்டியிட மாட்டோம். எமது நாட்டின் சுய கௌரவத்தை பெருமையை விட்டுக் கொடுக்கவும் மாட்டோம். மனித உரிமை கவுன்ஸிலை ஏற்கிறோம். ஆனால் இலங்கையை பின் தொடர்ந்து எமது நாட்டுக்கு எதிராக சாட்சியங்களை தேடி சர்வதேச நீதிமன்றங்களின் முன்னால் நிறுத்தும் முயற்சியை ஏற்க முடியாது.
இலங்கைக்கு மாத்திரம் விசேட பொறிமுறை கொண்டுவருவதை ஏற்க முடியாது. ஐ.நா சம்பிரதாயங்களுக்கு இது முற்றிலும் முரணானது.
செப்டம்பர் மாதம் நடைபெற்ற அமர்வில் இலங்கைக்கு எதிராக 120,000 சாட்சிகள் இருப்பதாக மனித உரிமை ஆணையாளர் தெரிவித்தார். அந்த சாட்சியங்களின் உண்மைத் தன்மை பற்றி அறியும் உரிமை எமக்குள்ளது.
யார் இந்த சாட்சியங்களை வழங்கினார்கள். ஆதரமற்ற மறைந்திருந்து முன்வைக்கும் சாட்சியங்ளை பயன்படுத்தி இறைமையுள்ள நாட்டுக்கு எதிராக பயன்படுத்த ஐ.நாவிற்கு முடியாது.
மனித உரிமை கவுன்ஸில் உயரதிகாரிகள் இருவர் ஜனவரியில் இலங்கை வருகின்றனர். நாம் எதனையும் மறைக்க மாட்டோம். அவர்கள் இங்கு வந்து நாட்டின் எந்த இடத்திற்கும் செல்லலாம்.
ஐ.நா சம்பிரதாயங்களின்படி எமது நாட்டு நிறுவனங்களுக்கு சுந்திரமாக செயற்பட இடமளிக்க வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழு, காணாமல் போனோர் அலுவலகம் போன்ற பல நிறுவனங்கள் செயற்படுகின்றன. அவற்றில் பாரிய முன்னேற்றம் உள்ளன.
சிவில் அமைப்புகளை நாம் துரோகிகளாக கருதவில்லை. அவர்களின் ஆலோசனைகளை ஏற்கிறோம்.எமது செயற்பாடுகளை பெற வரும் சனிக்கிழமை அவற்றை சந்திக்கிறோம்.
ஜி.எஸ்.பி சலுகை தொடர்பில் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஆனால் பயங்கரவாத தடைச் சட்டம் 42 வருடங்கள் பழைமையானது. அதனை ஒருபோதும் வாபஸ் பெற மாட்டோம். அழுத்தங்களுக்கு நாம் தலைசாய்க்க மாட்டோம். பயங்கரவாத தடைச் சட்டத்திற்கான திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் வெளிநாட்டு தூதூதகரங்களை அறிவூட்டுவோம்.
இந்தியாவை எதிரியாக கருதுவதாக பொன்னம்பலம் எம்.பி தெரிவித்தார். அதில் எந்த உண்மையும் கிடையாது. பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் நாட்டின் வெளிநாட்டு கொள்கை தொடர்பில் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். தேசிய உடன்பாட்டின்படி உலகிற்கு முன்வைக்கப்படுவதே இது.
இந்தியாவை ஒருபோதும் எதிரி நாடாக கருதவில்லை என்று குறிப்பிட்ட அவர் நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையை குறுகிய நோக்கில் பார்க்காது தேசிய கோணத்தில் நோக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
(லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்)
No comments:
Post a Comment