பிறக்கும் குழந்தைகளை தாக்கும் புதிய வகை நோய் : கர்ப்பிணித் தாய்மார் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் - வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 6, 2021

பிறக்கும் குழந்தைகளை தாக்கும் புதிய வகை நோய் : கர்ப்பிணித் தாய்மார் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் - வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம்

(எம்.மனோசித்ரா)

பிறந்து 28 நாட்களை விடக் குறைவான சிசுக்களை தாக்கும் மிஸ்-என் அதாவது புதிதாக பிறந்த குழந்தைகளில் பல் உறுப்பு அழற்சி நோய் (Multi System inflammatory Syndrome in Neonates (MIS- N)) தொடர்பில் கர்ப்பிணிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று கொழும்பு - சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

இந்நோய் கொவிட் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணி தாய்மாருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கே ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் தாய்மார் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் போது அவர்களின் உடலில் எதிர்ப்பொருள் (அன்டிபொடீஸ்) தோற்றுவிக்கப்பட்டு, அவை தொப்புள் கொடியூடாக வயிற்றிலுள்ள சிசுவுக்குச் செல்லவதால் இந்நோய் ஏற்படுகிறது என்றும் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், இதற்கு முன்னர் எம்மால் மிஸ்-சி என்று அறியப்பட்ட பல் உறுப்பு அழற்சி நோய் நிலைமையில் காய்ச்சல் பிரதான அறிகுறியாகக் காணப்படும். இந்நோய் சிறுவர்களை பாதிக்கக் கூடியதாகும். எனினும் மிஸ்-என் அறியப்படும் இந்நோய் பிறந்து 28 நாட்களுக்கும் குறைவான வயதைக் கொண்ட சிசுக்களையே அதிகம் பாதிக்கிறது.

இந்நோயில் காய்ச்சல் அறிகுறியாக தென்படாது. எனினும் உடற் தொகுதிகள் பாதிக்கப்படக் கூடிய அறிகுறிகள் உள்ளன. குறிப்பாக வயிற்றோட்டம், வாந்திபேதி, சுவாசிப்பதில் சிரமம், உடலில் பழுக்கள் தோன்றுதல், சோர்வு ஏற்படல், தாய் குடிக்காமை உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும்.

கொழும்பு - சீமாட்டி வைத்தியசாலையில் இதுவரையில் இந்நோயால் பாதிக்கப்பட்ட 4 சிசுக்கள் அனுமதிக்கப்பட்டு சிகிக்சையளிக்கப்பட்டு வருகிறது. இதே அறிகுறிகளுடன் காசல் வீதி போதனா வைத்தியசாலை, டி சொய்சா பெண்கள் வைத்தியசாலை உள்ளிட்ட நாட்டின் ஏனைய ஓரிரு வைத்தியசாலைகளிலும் சிசுக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

கர்ப்ப காலத்தில் தாய்மார் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் போது அவர்களின் உடலில் எதிர்ப்பொருள் (அன்டிபொடீஸ்) தோற்றுவிக்கப்படும். இவை தொப்புள் கொடியூடாக வயிற்றிலுள்ள சிசுவுக்குச் செல்லக் கூடும். இவை ஏனைய உடற்பாகங்களைளும் பாதிக்கக் கூடும். கொவிட் தொற்றுக்குள்ளான தாய்க்கு குழந்தை பிறந்ததன் பின்னரும் அக்குழந்தைக்கு இந்நோய் ஏற்படக்கூடும்.

ஆனால் பெரும்பாலான குழந்தைகளுக்கு பிறக்க முன்னரே தாய் கொவிட் தொற்றுக்கு உள்ளானமையினாலேயே ஏற்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. இந்நோய் தாக்கத்திற்கு உள்ளாகி அனுமதிக்கப்பட்ட சிசுக்கள் செயற்றை சுவாசத்தை வழங்கக் கூடிய நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்தோடு இவர்களுக்கு குருதி வெளியேறும் தன்மை என்பனவும் அதிகமாகக் காணப்படும் என்பதோடு, உடல் அங்கங்களையும் பாதிக்கக் கூடும். இதன் உச்சபட்ச பாதிப்பு சகல உடற் தொகுதிகளையும் செயழிலக்கச் செய்யும். இதனால் இந்நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் உயிரிழக்கக் கூடிய வாய்ப்புக்களும் அதிகமாகும்.

இது தொடர்பில் பொதுமக்கள் குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். இது தொடர்பான முகாமைத்துவ வழிகாட்டி குழந்தை நல விசேட வைத்திய நிபுணர்களால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நோய் கொவிட் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணி தாய்மாருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கே ஏற்படுகிறது. எனவே இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். இதுவரை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட சிசுக்களில் ஒரு சிசுவுக்கு மாத்திரமே பிறந்த பின்னர் இந்நோய் ஏற்பட்டுள்ளது. ஏனைய சிசுக்களுக்கு தாயின் வயிற்றிலிருக்கும் போதே ஏற்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment