(இராஜதுரை ஹஷான்)
தபால் சேவை, மின்சாரம், பெற்றோலியம், துறைமுகம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து முன்னெடுக்கவுள்ள அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலான தீர்மானத்தை நாளை அறிவிப்போம் என இலங்கை ஆசிரியர் அதிபர் சேவை தொழிற்சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கத்தினரது போராட்டத்திற்கு தீர்வை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.தொழிற்சங்கத்தினரது போராட்டத்திற்கு தீர்வை பெற்றுக் கொடுக்க பிரதமர் பலமுறை முயற்சித்தமையும், பிறிதொரு தரபபினர் அதற்கு தடையேற்படுத்தியதையும் அறிய முடிகிறது.
எமது கோரிக்கையை பலப்படுத்தும் வகையில் இன்று பகல் பாடசாலைகளுக்கு முன்பாக ஆசிரியர்களுடன் ஒன்றினைந்து பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள். எமது தொழிற்சங்க போராட்டத்திற்கு எதிராக பெற்றோரை திசைதிருப்பி விட அரசியல்வாதிகள் முன்னெடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளன.
எமது தொழிற்சங்க போராட்டத்திற்கு பல தரப்பினர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். தபால் சேவை, மின்சாரம், பெற்றோலியம், துறைமுகம் உள்ளிட்ட பல தொழிற்சங்கத்தினரை ஒன்றினைத்து முன்னெடுக்கவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை அறிவிப்போம்.
வரவு செலவு திட்டத்தில் எமது கோரிக்கைக்கு தீர்வை பெற்றுத்தருவதாக அரசாங்கம் பேச்சளவில் மாத்திரம் குறிப்பிட்டுக் கொள்கிறது. அரசாங்கத்தின் வாக்குறுதியின் மீது எமக்கு நம்பிக்கையில்லை.பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்துவதற்கான திட்டமிடல் அரசாங்கத்தின் வசமில்லை என்றார்.
No comments:
Post a Comment