தற்போது பெய்து வரும் மழை காரணமாக, நிந்தவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள ரசாக் ஹோட்டலுக்கு முன்னால் காணப்படும் பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்த ஆல மரம் இன்று (24) காலை முறிந்து வீழ்ந்ததால், இன்று காலை 7.30 மணி முதல் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.
இவ்விபத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், காலை முதல் நிந்தவூர் பிரதேசத்தில் மின்சாரம் தடைப்பட்டிருந்ததுடன், மாற்று உள் வீதியினூடாக போக்குவரத்துக்கள் இடம்பெற்றன.
இருந்தாலும் உள் வீதிகளில் மிக நீண்ட வாகன நெரிசல் காணப்பட்டமையால், நிந்தவூர் வரலாற்றில் மிக மோசமான வாகன நெரிசலாக இது காணப்பட்டது.
இந்த சம்பவத்தினால் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்ததுடன், மரத்தினை அகற்றும் பணியில், போக்குவரத்து பொலிசார், வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை மின்சார சபை மற்றும் நிந்தவூர் பிரதேச சபை ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைவேளை, பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்த இந்த மரம் காணப்பட்டதால், பிரதான வீதியின் ஊடாக பயணம் செய்பவர்கள் இந்த மரத்துக்கு கீழே ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும் தங்களது பயணத்தை தொடர்ந்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
(நிந்தவூர் நிருபர்)
No comments:
Post a Comment