அபுதாபி செல்கிறார் ஜனாதிபதி, இலங்கை சர்வதேச மட்டத்தில் நல் நிலையில் உள்ளது என்கிறார் ஜி.எல்.பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, November 29, 2021

அபுதாபி செல்கிறார் ஜனாதிபதி, இலங்கை சர்வதேச மட்டத்தில் நல் நிலையில் உள்ளது என்கிறார் ஜி.எல்.பீரிஸ்

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரான அபுதாபியில் எதிர்வரும் மாதம் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்வதேச இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ ஆரம்ப உரையாற்றுவார். 5ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரச தலைவரான அல் நாயன் இளவரசருடன் ஜனாதிபதி விசேட பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேச இந்து சமுத்திர மாநாட்டு ஒருங்கிணைப்பு குழுவின் தலைமைத்துவ பதவியை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வகிப்பார்.

உப தலைவர்களாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்,ஓமான் நாட்டு வெளிவிவகார அமைச்சர் அல்-பார்ட் புசைடி, சிங்கப்பூர் நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி விலியம் பாலகிருஸ்ணம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோர் பதவி வகிப்பார்கள்.

இந்து சமுத்திர மாநாட்டில் ஆரம்ப நிகழ்வில் விசேட உரையாற்றும் அழைப்பு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. பொதுவான வெளிவிவகார கொள்கையினை செயற்படுத்துவதன் காரணமாக இலங்கை சர்வதேச மட்டத்தில் நல் நிலையில் உள்ளது.

'சுற்றாடல்,பொருளாதாரம் மற்றும் தொற்றுப் பரவல்' என்பது இம்முறை இடம்பெறவுள்ள இந்து சமுத்திர மாநாட்டின் தொனிப்பொருளாக காணப்படுகிறது. இந்த மாநாடு இலங்கைக்கு சாதகமாக அமையும். இரண்டு வாரத்திற்கு முன்னர் பங்களாதேஸ் நாட்டின் டாக்கா நகரில் இடம்பெற்ற இந்திய சமுத்திர பிராந்திய அமைச்சரவை கவுன்சிலின் 21ஆவது கூட்டத் தொடர் இடம்பெற்றது.

கடந்த மாதம் 17ஆம் திகதி அக்கூட்டத் தொடரின் ஒருங்கிணைப்பாளர் பதவி இலங்கைக்கு கிடைக்கப் பெற்றது. பங்களாதேஸ் நாட்டு பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்தை பல முதலீட்டு திட்டங்களுக்கு சாதகமாக அமைந்தது.

எதிர்வரும் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ள மாநாடு இலங்கையின் பல்துறை சார் முன்னேற்றங்களுக்கு சாதகமாக அமையும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு பின்னரான பொருளாதார பாதிப்புக்களில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகளுடன் ஒன்றினைந்து செயற்படுவது அவசியமாகும் என்றார்.

No comments:

Post a Comment