யுகதனவி மின்னுற்பத்தி நிலைய ஒப்பந்தத்தை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் : அடுத்த மாதம் பரிசீலனைகளை முன்னெடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Monday, November 29, 2021

யுகதனவி மின்னுற்பத்தி நிலைய ஒப்பந்தத்தை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் : அடுத்த மாதம் பரிசீலனைகளை முன்னெடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்

(எம்.எப்.எம்.பஸீர்)

கெரவலபிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 40 வீதமானவற்றை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனைகளை எதிர்வரும் டிசம்பர் 16, 17 ஆம் திகதிகளில் முன்னெடுக்க உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை (29) தீர்மானித்தது.

இந்த விடயம் தொடர்பில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 3 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், திங்கள் (29) முதல் தடவையாக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அளுவிஹார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரி.பி. தெஹிதெனிய ஆகியோர் அடங்கிய ஐவர் கொண்ட பூரண நீதியரசர்கள் அமர்வொன்றின் முன்னிலையில் ஆராயப்பட்டது. இதன்போதே இதற்கான உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்தது.

இதன்போது, இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் அடிப்படை ஆட்சேபனைகள் இருப்பின் அதனை எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் திகதிக்கு முன்னர் மன்றில் சமர்ப்பிக்க பிரதிவாதிகள் தரப்புக்கு உத்தர்விட்ட நீதிமன்றம், அந்த ஆட்சேபனைகளுக்கு பதில் வாதங்களை மனுதாரர்கள் எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்தது.

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவன்ச தேரர், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க மற்றும் இலங்கை மின்சார தொழில்நுட்ப சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஞ்சன் ஜயலால் பெரேரா ஆகியோரால் இந்த 3 அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் 27 பேர், இலங்கை மின்சார சபை, வெஸ்ட் கோஸ்ட் பவர் தனியார் நிறுவனம், லக்தனவி நிறுவனம், இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், கொள்வனவு செய்யும் அமரிக்க நிறுவனமான நியூ போர்ட்ரிஸ் எனர்ஜி, நிதி,மின்சார, வலு சக்தி அமைச்சுக்களின் செயலர்கள், அமைச்சரவையின் செயலர் உள்ளிட்ட 43 தரப்பினர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இவர்களில் அமைச்சரவை அமைச்சர்கள், அரச அதிகாரிகளுக்காக சட்ட மா அதிபர் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் ஆஜராகும் நிலையில், அமைச்சரவை அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் சார்பில் தனிப்பட்ட சட்டத்தரணி ஒருவர் ஆஜராவதாக கடந்தவாரம் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

அதன்படி இம்மூவர் தொடர்பிலும் சட்டமா அதிபர் இம்மனுவில் பிரசன்னமாவதில்லை எனவும் அவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா மன்றில் ஆஜராவார் எனவும் நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியிலேயே இந்த மனுக்கள் (29 )திங்களன்று உயர் நீதிமன்றில் ஆராய்ப்பட்டது.

முன்னதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், கெரவலப்பிட்டி யுகதநவி மின் உற்பத்தி நிலையத்தின், இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான பங்குகளில் 40 வீதத்தை பிரதிவாதியான அமெரிக்க நிறுவனத்திற்கு கையளிக்க அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் நியாயமானது அல்ல என மனுதாரர்கள் தமது மனுக்கள் ஊடாக குறிப்பிட்டுள்ளனர்.

அந்த முடிவை எடுப்பதற்கு முன்னர் தேசிய பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்களில் கவனம் செலுத்த பிரதிவாதியான அமைச்சரவை தவறியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இலங்கையில் எரிவாயு உற்பத்தியின் ஏகபோக உரிமையானது உரிய பரிமாற்ற நடவடிக்கையின் ஊடாக பிரதிவாதியான அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்தப் பங்குகளை வழங்குவதில் முறையான விலைமனு கோரல் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். இது இந்த பங்குகளை கையளிக்கும் நடவடிக்கையின் வெளிப்படைத்தன்மை தொடர்பில் பாரிய கேள்விகளை எழுப்புவதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, எந்த ஒரு நியாயமான ஆய்வும் இன்றி உரிய பங்குகளை மாற்றுவதற்கு அமைச்சரவை எடுத்த முடிவு நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசாங்கப் பங்குகளை மாற்றுவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் இந்த மனுக்கள் ஊடாக உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment