(ஏ.என்.ஐ)
பெஷாவர் இராணுவ பள்ளி படுகொலை தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
2014 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி தெஹ்ரிக்-இ-தலிபான் மற்றும் பாகிஸ்தானிய தலிபான் என்றும் அழைக்கப்படும் ஆறு பயங்கரவாதிகள் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள இராணுவப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த தாக்குதலில் சிறுவர்கள் 132 பேர் உட்பட 147 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் தலைமை நீதிபதி குல்சார் அகமது தலைமையிலான உச்ச நீதிமன்றில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
தாக்குதலில் கொல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோரின் குறைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறு சட்டமா அதிபருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய நீதிமன்ற விசாரணையின் போது நீதிமன்றத்தின் உத்தரவை பிரதமர் வாசித்தாரா என்று சட்டமா அதிபர் காலித் ஜாவேத் கானிடம் தலைமை நீதிபதி கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த ஜாவேத் கான், இந்த உத்தரவு பிரதமருக்கு அனுப்பப்படவில்லை என்றும், அது குறித்து பிரதமர் இம்ரானுக்குத் தெரிவிப்பதாகவும் மன்றில் தெரிவித்தார். இவ்வாறானதொரு நிலையிலேயே பிரதமர் இம்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment