தான் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 2, 2021

தான் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

(எம்.எப்.எம்.பஸீர்)

சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விஷேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித்த திஸாநாயக்க, அத்திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஹான் பிரேமரத்ன, சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. திலகரத்ன, அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் மற்றும் சட்டமா அதிபர் ஆகிய 07 பேரை பிரதிவாதிகளாக பெயரிட்டே இந்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணிகளான நாமல் கருணாரத்ன மற்றும் உதார முகந்திரம்கே ஆகியோர் ஊடாக அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச மக்களை தௌிவூட்டுவதற்காக 'சூம்' தொழில்நுட்பத்தினூடாக கடந்த 25 ஆம் திகதி நடத்தப்பட்ட கலந்துரையாடல் குறித்து தேசிய உளவுச் சேவை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரால் சுரேஷ் சாலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அந்த முறைப்பாட்டுக்கு அமைய தான் வாக்குமூலம் பதிவு செய்ய எனக்கூறி இன்று 3 ஆம் திகதி சி.ஐ.டி. க்கு அழைக்கப்பட்டுள்ளதாக அருட்தந்தை சிறில் காமினி மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் தம்மை கைது செய்வதற்கான திட்டங்கள் உள்ளதாக அவர் அம்மனுவில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் தனது மனுவை இன்றையதினம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறும், மனு மீதான விசாரணை நிறைவு பெறும் வரை தாம் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கான உத்தரவை பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பிறப்பிக்குமாறும் அருட்தந்தை சிறில் காமினி தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் எந்த நியாயமான காரணிகளும் இன்றி தன்னை கைது செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறும் நிலையில், இதனூடாக தனது அரசியல் அமைப்பு ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள 12 (1),13(1), 14 (1) அ ஆகிய உறுப்புரைகள் பிரகாரம் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்மானிக்குமாறு அருட் தந்தை சிறில் காமினி அரசியல் அமைப்பின் 17 மற்றும் 126 ஆம் உறுப்புரைகளுக்கு அமைய தாக்கல்ச் எய்துள்ள குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் கோரியுள்ளார்.

No comments:

Post a Comment