இலங்கைத் தமிழர்கள் அகதிகள் அல்ல, எங்கு வாழினும் அனைவரும் ஒரு தாய் மக்களே - தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 2, 2021

இலங்கைத் தமிழர்கள் அகதிகள் அல்ல, எங்கு வாழினும் அனைவரும் ஒரு தாய் மக்களே - தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

'தமிழர்கள் எங்கு வாழினும் அனைவரும் ஒரு தாய் மக்களே..! கடல் பிரித்த நம்மை உங்கள் கண்ணீர் இணைத்திருக்கிறது. என்றைக்குமே ஓர் உடன் பிறப்பாக உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.' என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் வாழும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, 317 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்தது.

அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டத்தில் உள்ள மேல் மணவூரில் இலங்கை தமிழர்களின் மறு வாழ்விற்காக புதிதாக குடியிருப்பு 142 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட இருக்கிறது. இதன் அடிக்கல் நாட்டு விழா நேற்று வேலூரில் நடைபெற்றது. 

இதில் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், அமைச்சர் துரைமுருகன், வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.

இவ் விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், ''இலங்கை தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம் திமுக. கடந்த பத்தாண்டு காலமாக இலங்கை தமிழர்கள் குறித்து அதிமுக அரசு சிறிதும் கவலைப்படவில்லை.

திமுக அரசு பொறுப்பேற்றவுடன் இலங்கை தமிழர் நலவாழ்வு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அகதிகள் முகாமை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்துள்ளோம். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஏராளமான திட்டங்கள் இலங்கை தமிழர்களுக்காக செயல்படுத்தப்படுகிறது. இலங்கை தமிழர் முகாம்களின் கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

இலங்கைத் தமிழர்கள் அகதிகள் அல்ல. அனாதைகள் அல்ல. அவர்கள் அனைவரும் எம்மில் ஒருவர். தமிழர்கள் எங்கு வாழினும் அனைவரும் ஒரு தாய் மக்களே! கடல் பிரித்த நம்மை உங்கள் கண்ணீர் இணைத்திருக்கிறது. என்றைக்குமே ஓர் உடன் பிறப்பாக, உங்களுக்கு உறுதுணையாக நிற்பேன்'' என்றார்.

இவ்விழாவில் பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் இலங்கை தமிழர் மாணவர் ஒருவருக்கு அவருக்கான கல்வி கட்டணம் முழுவதுமாக வழங்கப்பட்டது. மேலும் பல மாணவ மாணவிகளுக்கு புலமைப்பரிசில்களும் அவர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள மேல்மொணவூரிலுள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமிற்கு சென்று அங்குள்ள இலங்கைத் தமிழர்களிடம் உரையாடி, அவர்களின் குறைகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment