(எம்.மனோசித்ரா)
கிண்ணியா - குறிஞ்சங்கேணி களப்பு பகுதியில் பயணிகள் போக்குவரத்திற்காக படகு சேவைக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் ஆதரவுடனான கிண்ணியா நகர சபை அனுமதி வழங்கியுள்ளதாக கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.
எனவே இதனால் ஏற்பட்டுள்ள விபரீதத்தின் அரச தரப்பின் மீது சுமத்துவதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடுத்துள்ள முயற்சியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பகுதியில் குறிஞ்சங்கேணி களப்பில் படகு கவிழ்ந்து 6 பேர் உயிரழந்ததையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா அங்கு பாலத்தை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டிய போதிலும் இதுவரையில் நிர்மாணப்பணிகள் முழுமையடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், எவ்வாறிருப்பினும் இந்த சம்பவத்திற்கு அரசாங்கம் என்ற ரீதியில் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம். இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். குறித்த படகு பயணித்தமைக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
நீண்ட காலமாக குறித்த களப்பின் ஊடாக பாலமொன்று நிர்மாணிக்கப்படவில்லை என்பதோடு, அதற்காக நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
அந்த மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வாக எமது அரசாங்கத்தினால் குறித்த பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதனை துரிதமாக நிறைவு செய்வோம்.
பாதுகாப்பற்ற முறையில் இந்த படகினைப் பயன்படுத்துவதற்கு நகர சபை அனுமதியளித்துள்ளமையே இந்த அசம்பாவிதத்திற்கான காரணமாகும்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையானது எதிர்காலத்தில் சரியான நியமங்களுக்கு அமைவாக குறித்த களப்பின் ஊடாக பயணிகள் போக்குவரத்து முறையை வழங்கவுள்ளது என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment