(எம்.மனோசித்ரா)
தென் ஆபிரிக்காவில் இனங்காணப்பட்டுள்ள 'ஒமிக்ரோன்' புதிய கொவிட் திரிபின் காரணமாக நாட்டை மீண்டும் முடக்குவது தொடர்பில் சுகாதார அமைச்சோ அல்லது அரசாங்கமோ இதுவரையில் எந்த பரிந்துரைகளையும் முன்வைக்கவில்லை. மீண்டும் முடக்கத்திற்கு செல்லாதவாறு செயற்படுவது அனைவரதும் பொறுப்பாகும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் 'ஒமிக்ரோன்' தொற்றுக்கு உள்ளாகியுள்ளனரா என்பதை வரும் போதே இனங்காண முடியாது. கொவிட் திரிபுகளை இனங்காண்பதற்கான பரிசோதனைகளிலேயே அதனை இனங்காண முடியும். பரிசோதனைகளின் ஊடாக இனங்காணப்படும் வரை நாட்டில் புதிய வைரஸ் பரவியிருப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளதாகவும் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் திங்கட்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் வரும் போதே 'ஒமிக்ரோன்' தொற்றுடன் வருவார்களா என்பதை முன்னரே இனங்காண முடியாது. நாட்டில் முன்னெடுக்கப்படும் கொவிட் திரிபுகளை இனங்காண்பதற்கான பரிசோதனைகளிலேயே அதனை இனங்காண முடியும்.
அந்த பரிசோதனைகளின் ஊடாக இனங்காணப்படும் வரை நாட்டில் 'ஒமிக்ரோன்' பரவியிருப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. எனவே 'ஒமிக்ரோன்' நாட்டுக்குள் நுழைந்துள்ளதா இல்லையா என்பதை ஆராய்வதை விட , நுழையாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்வதே தற்போது முக்கியத்துவமுடையதாகும்.
தென் ஆபிரிக்காவில் 'ஒமிக்ரோன்' புதிய பிறழ்வு கண்டறியப்பட்டுள்ள நிலையில் நாட்டை மீண்டும் முடக்குவதற்கான பரிந்துரைகள் சுகாதார அமைச்சினாலோ அல்லது அரசாங்கத்தினாலோ இதுவரையில் முன்வைக்கப்படவில்லை. அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுப்பதற்கும் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் முடக்கத்திற்கு செல்லாதிருக்கும் வகையில் செயற்படுவது அனைவரதும் கடமையாகும்.
விமான நிலையங்களில் உடனடி பி.சி.ஆர். பரிசோதனைகளை செய்வதன் ஊடாக புதிய திரிபுகளை இனங்காண முடியாது. காரணம் வெளிநாடுகளிலிருந்து நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் நாட்டுக்கு வருகை தருகின்றனர். இவர்கள் அனைவரது மாதிரிகளையும் திரிபுகளை இனங்காண்பதற்கான பரிசோதனைக்கு உட்படுத்துவது சாத்தியமற்றது.
எனவே நாட்டுக்கு வருவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனை செய்துள்ளதோடு, முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டிப்பவர்களை விடுவித்து எஞ்சியுள்ளோரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் செயற்பாடே தற்போது முன்னெடுக்கப்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment