தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் ஒரு வான் கதவு தன்னியக்க முறையில் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் தாழ்நிலப் பகுதியில் கொத்மலை ஓயாவிற்கு இருமருங்கிலும் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் மின்சார சபை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதேவேளை அதிக மழை காரணமாக கெனியோன் மற்றும் லக்ஸபான உள்ளிட்ட நீர்த் தேக்களினதும் வான் கதவுகள் அடிக்கடி திறக்கப்பட்டு வருகின்றன.
கடந்த சில தினங்களாக மாலை வேளையில் தொடர்ச்சியாக நீரேந்தும் பிரதேசங்களில் பெய்து வரும் அதிக மழை காரணமாக காசல்ரீ, கனியோன், லக்ஸபான, நவலக்ஸபான, மவுசாகலை, விமலசுரேந்திர உள்ளிட்ட நீர்த் தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகின்றன.
நாட்டில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இதில் நுவரெலியா மாவட்டமும் அடங்குகின்றது.
தொடர் மழை காரணமாக கொழும்பு ஹட்டன் பிரதான வீதிகளில் பல இடங்களிலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பல இடங்களிலும் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் மண் மேடுகள் சரிந்து வீழ்ந்து ஒருவழி போக்குவரத்துக்கு வழிவகுத்துள்ளன.
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் தொடர்ந்தும் மாலை வேளையில் கடும் மழை பெய்து வருகின்றது.
நீரேந்தும் பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழை காணமாக மலையகத்தில் காணப்படும் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்து அடிக்கடி பல நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படுகின்றன.
இதேவேளை, மழை காரணமாக பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதனால் மலைகளுக்கும் மண்மேடுகளுக்கும் அருகாமையில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் மண்சரிவு அபாயம் காணப்படும் பட்சத்தில் அப்பிரதேசங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் மேலும் கேட்டுக் கொண்டுள்ளது.
மாலை வேளையில் மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்ககையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
மலையக சிறப்பாக கொண்டாடும் தீபாவளி பண்டிகை மழை மற்றும் பொருட்களின் விலையேற்றம் காரணமாக இம்முறை சூடுபிடிக்கவில்லை இதனால் நகரங்களில் மாலை வேளையில் குறைவாகவே காணப்படுகின்றன. தீபாவளி வர்த்தக நடவடிக்கைகளும் முடங்கிபோயுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹட்டன் - கொழும்பு, ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதிகளில் மாலை வேளையிலும் பகல் வேளையிலும் மழையுடன் அடிக்கடி பனி மூட்டமும் என்றுமில்லாதவாறு காணப்படுகின்றன.
எனவே வளைவுகள் நிறைந்த இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை தங்களது வாகனங்களை தமக்குரிய பக்கத்தில் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு அவதானமாக செலுத்துவதன் மூலம் வாகன விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என பொது போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
(ஹட்டன் விசேட நிருபர் - கே. சுந்தரலிங்கம்)
No comments:
Post a Comment