(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
நான் மரக்கறிகள் பற்றி கூறினேனே தவிர பெண்களை அவமரியாதைக்கு உட்படுத்தும் வகையில் எதனையும் கூறவில்லை. நான் வக்கிரப்புத்திக்காரன் அல்ல. தான் கூறியதை கேட்டு தவறாக புரிந்துகொண்டவர்களே வக்கிரப்புத்திக்காரர்கள். அத்துடன் நான் தெரிவித்த கருத்தில் தவறு இருப்பதாக தெளிவாக குறிப்பிட்டால் மன்னிப்புக் கோரத் தயார் என ஆளும் கட்சி உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கடந்த 20 ஆம் திகதி வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது, மரக்கறி வகைகளின் பெயர்களை குறிப்பிட்டு உரையாற்றுகையில், பெண்களை அகெளரவப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாக அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சபையில் நேற்று எழுந்த சர்ச்சைக்கு தனது நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில், நான் வரவு செலவு திட்டத்தில் உரையாற்றும் போது சில விடயங்களை கூறி உரையாற்றினேன். எனது உரையில் நான் கூறிய தகாத வார்த்தை என்ன என்பதனை எனக்கு தெளிவுப்படுத்துங்கள்' என்றார்.
இதன்போது குறிப்பிட்ட சபாநாயகர், உங்களின் உரையின் போது தவறான வார்த்தை பயன்படுத்தியிருந்தால் அது தொடர்பாக கவலையடைவதாக கூறுங்கள் என்றார்.
இதனை தொடர்ந்து உரையாற்றிய திஸ்ஸ குட்டியாராச்சி கூறுகையில், எனது வாயால் பெண்களை அவமரியாதைக்கு உட்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தாலே அதற்கு நான் கவலை, மன்னிப்பு கோர வேண்டும்.
சந்தையில் மரக்கறி வியாபாரி எப்படி அந்தப் பொருளை கூறி விற்பார் என்று கூறுங்கள். நான் வக்கிரம் கொண்டவன் அல்ல. அதனை கேட்டுக் கொண்டிருந்தவர்கள் வக்கிரமாக இருந்தால் எனக்கு செய்வதற்கு ஒன்றும் இல்லை. நான் கத்தரிக்காய், வட்டக்காய் பற்றி கூறும் போது எப்படி பெண்களுக்கு அது அவமரியாதையாக அமையும் என கேட்கின்றேன். இது எனக்கு புரியவில்லை.
இந்த பாராளுமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்க, ஹிருணிகா போன்றோர் கதைக்கும் போது இந்தப் பெண்கள் எங்கே போனார்கள். எனக்கு இந்த விடயத்தில் அநீதி இழைக்க வேண்டாம். நான் மேலிருந்து கீழ் வரையிலும் எதிர்க்கட்சியினரை தாக்கிப் பேசினேனே தவிர வேறு விடயங்களை கூறவில்லை.
நான் மரக்கறிகள் பற்றி பேசினேனே தவிர பெண்களை அவமரியாதைக்கு உட்படுத்தும் வகையில் எதனையும் கூறவில்லை. நான் கூறிய வசனத்தின் தவறு என்ன என்று கூறினால் நான் மன்னிப்புக் கோரத்தயார். உங்கள் வாயாலேயே அதனை கூறுங்கள். நான் அப்போது மன்னிப்புக் கேட்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment