(இராஜதுரை ஹஷான்)
கட்சி என்ற ரீதியில் வெறுப்பு, வைராக்கியம், ஆகியவற்றை துறந்து மக்கள் வழங்கிய பொறுப்பினை முன்னெடுத்து செல்ல அரசாங்கத்தில் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுஜன பெரமுன தோற்றம் பெற்றுள்ள சவால்களை வெற்றி கொண்டு இனிவரும் காலங்களிலும் ஆட்சியை கைப்பற்றி மக்களுக்கான சிறந்த சேவையை முன்னெடுக்கும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர், நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 5 ஆண்டு பூரண விழா செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள தாமரை தடாத அரங்கின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை பொது மேடைகளில் பிரதான உரை நிகழ்த்தவில்லை. கட்சியின் 5 ஆவது ஆண்டு பூரண விழாவில் பிரதான உரை ஆற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் பிரதான பலம் பொருந்திய கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் முன்னேற்றமடைந்துள்ளது.
அரசியல் ரீதியில் எவரையும் தோற்கடிப்பதற்காக கட்சியை ஸ்தாபிக்கவில்லை. மக்களின் முன்னேற்றம், வெற்றி ஆகியவற்றை கருத்திற் கொண்டு கட்சியை ஸ்தாபித்தோம்.
எமது பிரதான நோக்கம் மக்களின் முன்னேற்றத்தையும், வெற்றியையும் அடிப்படையாகக் கொண்டதாக காணப்படுகிறது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய மட்டத்தில் மாத்திரமல்ல சர்வதேச மட்டத்திலும் பலமடைந்துள்ளது. நண்பர்களின் ஆதரவுடனும், எதிரிகளினால் ஏற்படுத்தப்பட்ட சவால்களையும் கருத்திற் கொண்டு அரசியலில் செல்வாக்கு செலுத்தி மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளோம்.
கட்சி என்ற ரீதியில் வெறுப்பு, வைராக்கியம் ஆகியவற்றை துறந்து ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் பல சவால்கள் காணப்படுகின்றன. பின்னடைய வேண்டாம்.
மக்கள் வழங்கிய பொறுப்பினை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைத்து சவால்களையும் வெற்றி கொண்டு பொதுஜன பெரமுன இனிவரும் காலங்களிலும் ஆட்சியமைக்கும் என்றார்.
No comments:
Post a Comment